வீட்டிலிருந்தப்படியே வாக்களிக்க 1651 வாக்காளர்கள் விருப்பம்

வீட்டிலிருந்தப்படியே வாக்களிக்க 1651  வாக்காளர்கள் விருப்பம்

ஏனாத்தூர் பகுதியில் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க முதியவர் ஒருவருக்கு 12டி படிவம்  வழங்கப்பட்ட போது. ( கோப்பு படம்)

நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க 1039 மூத்த குடிமக்கள் மற்றும் 612 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1651 நபர்கள் 12 D படிவம் பெற்றுள்ளனர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களான 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட படிவம் 12D - வழங்கப்பட்டது

இதன்படி வீட்டிலிருந்தப்படியே வாக்களிக்க 1039 மூத்த குடிமக்கள் மற்றும் 612 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1651 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

மேற்படி நபர்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நடமாடும் குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் ஆகியோர் இருப்பர்.

வாக்குச் சாவடிக்கு வரஇயலாத வாக்காளர்களின் விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு எந்த தேதியில் எந்த நேரத்தில் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற தகவலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக வாக்காளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் குறிப்பிட்ட நாளில் சம்மந்தப்பட்ட வாக்காளரின் வீடுகளுக்கு சென்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மூலம் வாக்காளர் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற விளக்கத்தினை அளித்து அதன்பேரில் அவர்களிடம் இரகசிய வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்படி வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் புகைப்பட கலைஞர் மூலம் ஒளிப்பதிவு செய்யப்படவுள்ளது.

எண்.06 காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் நபர்களுக்கு இத்தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பின் அவர்களுக்கு படிவம் 12A வழங்கப்பட்டு தேர்தல் பணிச்சான்று வழங்கப்பட உள்ளன. தேர்தல் பணிச்சான்று பெற்ற நபர்கள் அவர்கள் பணிபுரியும் வாக்குச் சாவடியிலே வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு வாக்குச் சாவடிக்கு வர இயலாத அனைத்து தரப்பினரும் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை சம்மந்தப்பட்ட நபர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விடுபாடு ஏதுமின்றி வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story