மழைநீர் வடிகால் வெளியேற்ற முன்னேற்பாடுகள் குறித்து எம்.எல்.ஏ, மேயர் ஆய்வு
பல்லவன் நகர் முதல் ஜெம் நகர் வரை சாலையோரம் அமைக்கபட்ட சுமார் 200மீட்டர் ஆக்கிரமிப்பு கால்வாய் அகற்றி பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வானிலை மாற்றம் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. கோடை கத்திரி என கூறப்படும் நிலையில் பருவ மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள பல்லவன் நகர் பகுதியில் இருந்து ஜெம் நகர் பகுதி வரை சாலையோரம் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர் வெளியேறாமல் உள்ளது.
இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் மேயருக்கு தகவல்கள் வந்தது. தொடர்ந்து இப்பகுதியை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மண்டல குழு உறுப்பினர் மோகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பானுப்பிரியா சிலம்பரசன், விஸ்வநாதன், ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் சுமார் 200 மீட்டர் தூரம் கால்வாய்கள் மூடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டதும் உடனே அகற்றி கால்வாய் தூர் வாரும் பணியை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினர்.
மேலும் அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்காாமல் வெளியேறும் வகையில் அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி தொடர்ந்து பராமரிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக அகற்றி தொடர்ந்து கண்காணித்திடவும் சட்டமன்ற உறுப்பினர் உத்தரவிட்டார்.இந்த ஆய்வில் மாநகராட்சி பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.