பா்கூா் மலைப் பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு..! மூவா் படுகாயம்..!

பா்கூா் மலைப் பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு..! மூவா் படுகாயம்..!
X
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். உடன் பயணித்த மூவா் படுகாயம் அடைந்தனா்.

ஈரோடு : அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.உடன் பயணித்த மூவர் படுகாயம் அடைந்தனர்.

அந்தியூரிலிருந்து அரசுப் பேருந்து தாமரைக்கரை வழியாக மலைப் பகுதியில் உள்ள கொங்காடை நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்தியூரை அடுத்த பிரம்மதேசம், பாறையூரைச் சேர்ந்த சந்திரன் (48) பேருந்தை ஓட்டிச் சென்றார்.

சத்தி அருகே உள்ள கடம்பூர், மாக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் சித்தேஷ் (20 ). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர், தனது நண்பர்களான கொங்காடை, எஸ்டி காலனியைச் சேர்ந்த ரவி மகன் ராஜ்குமார் (18), ஜடையன் மகன் குமார் (18), குமார் மகன் விஜய் (18) ஆகியோருடன் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சித்தேஷ் வாகனத்தை ஓட்ட மூவரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

கொங்காடை - கோவில்நத்தம் சாலையில் வேங்கை மரத்தொட்டி அருகே சென்றபோது, அரசுப் பேருந்து எதிர்பாராமல் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த சித்தேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற மூவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து பர்கூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story