கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னிமலை அருகே விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்தும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) பிரதமர் மோடி கோவை வந்த போது இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செரிவூட்டுவது நின்று விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலையில் கடந்த 12-ந் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தையும் அறிவித்தனர். அதன்படி இன்று சென்னிமலை அருகே தலவுமலை என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் ஏரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முருங்கத்தொழுவு ஊராட்சி தலைவர் மு.ரவி தலைமைத் தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளர் கு.பொடாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களை கையில் ஏந்தி, கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu