சத்தியமங்கலம் : விளைச்சல் குறைவால் பூக்கள் விலை உயர்வு
விளைச்சல் குறைவு காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், கோழிக்கொண்டை பூ, கிலோ ரூ.120- க்கு விற்பனை செய்யப்பட்டது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். விவசாய தோட்டங்களில் தனியாகவும் வாழைத் தோட்டங்களில் ஊடுபயிராகவும் பயிரிட்டுள்ளனர்.
தற்போது முகூர்த்த சீசன் இல்லாத நிலையிலும் ஆடி மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் விசேஷங்களுக்கு பயன்படுத்தப்படும் கோழிக்கொண்டை பூக்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. மேலும் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி குறைந்ததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கோழிக்கொண்டை பூக்கள் வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணமாக தற்போது பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கொண்டை பூ கிலோ ரூ. 30 க்கு விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ. 120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் வரத்து குறைந்ததால் கோழிக்கொண்டை பூக்கள் விலை அதிகரித்ததன் காரணமாக, இப்பூக்களை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.