பச்சை துரோகம் பண்ணிட்டாரே எடப்பாடி: உச்சக்கட்ட டென்ஷனில் ஓபிஎஸ்

பச்சை துரோகம் பண்ணிட்டாரே எடப்பாடி:  உச்சக்கட்ட டென்ஷனில் ஓபிஎஸ்
X

ஓபிஎஸ் - இபிஎஸ்

நடந்து முடிந்த தேர்தலில் மண்ணை கவ்விய அதிர்ச்சியில் இருந்து தொண்டர்களும், நிர்வாகிகளும் மீள்வதற்குள் அதிமுகவுக்குள் புது புகைச்சல் ஒன்று கிளம்பி உள்ளது

பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். நேற்றைய தினம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புழல் சிறைக்கு சென்று, ஜெயக்குமாரை நேரில் சந்தித்தார். எடப்பாடியே, நேரில் சென்றதால், அநேகமாக ஜெயக்குமாரை விடுவிக்க கட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றே தெரிகிறது.. அதுமட்டுமல்லாமல், ஜெயக்குமாரை எடப்பாடி சந்தித்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்பட்டது..

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, ரவுடிகளையும் குண்டர்களையும் தேர்தலில் கைது செய்யாமல், அவர்களை ஏவியதால் இதுபோன்ற பிரச்சனைகள் நிலவி வருகின்றன. திமுக 9 மாத கால ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தில் உள்ளாட்சி தேர்தலில் கொடுத்து வெற்றி பெற்றுள்ளது.. கள்ள ஓட்டு போட முயன்றவர் பல்வேறு குற்றங்களில் குண்டர் சட்டத்தில் சிறை சென்று ஜாமீனில் வந்துள்ளவர். அவரை கைது செய்யாமல் கள்ள ஓட்டை தடுத்த ஜெயகுமார் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்' என்று கொந்தளித்தார்.

இப்படிப்பட்ட சூழலில்தான் திடீரென கட்சிக்குள் மேலும் புகைச்சல் கிளம்பி உள்ளது. அந்த புகைச்சல் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது, ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுக மேலிடம் கொண்டாடி உள்ளது. அந்த விழா முடிந்தபிறகு, அதிமுக தலைமையகத்திலிருந்து தன்னுடைய வீட்டுக்கு வந்தார் ஓபிஎஸ்..

ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே, 'எடப்பாடியும் வேலுமணியும் புழல் சிறையில் இருக்கும் ஜெயக்குமாரை சந்திக்க போய்க்கொண்டிருக்கிறார்கள்..இதுக்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தான் ஏற்பாடு செஞ்சிருக்கார்' என்ற தகவல் ஓபிஎஸ் காதில் விழவும், அப்படியே ஷாக் ஆனதுடன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம்.

உண்மையிலேயே இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? எடப்பாடி ஏன் ஓபிஎஸ்ஸை கழட்டிவிட்டு போனாரா? ஓபிஎஸ் கோபத்தில் நியாயம் உள்ளதா? ஜெயிலில் இருக்கும் ஜெயக்குமாரை சந்திக்க எடப்பாடி செல்வதில் ஓபிஎஸ்சுக்கு ஏன் கோபம் வர வேண்டும்? என்பன போன்ற நம்முடைய சந்தேகங்களை ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான தரப்பினரிடம் கேட்டோம்.. அவர்கள் சொன்னதாவது:

'ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கட்சி தலைமையகத்துக்கு அருகே உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில், மக்களுக்கும் தொண்டர்களுக்கும் அறுசுவை உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதனை ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் துவக்கி வைத்தார்கள். அப்போது, 'இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு அடுத்து வேறு நிகழ்ச்சி இருக்கா?' என்று எடப்பாடியிடம் ஓபிஎஸ் கேட்டிருக்கிறார். அதற்கு எடப்பாடியோ, 'எனக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லைண்ணே. நேரா வீட்டுக்குத்தான் போறேன். உங்களுக்கு ஏதேனும் நிகழ்ச்சி இருக்கா?' என்று கேட்க, 'எனக்கு ஒன்றுமில்லை. நானும் வீட்டுக்குத்தான் போறேன்' என்று சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ்.

அதே மாதிரி, கட்சி அலுவலகத்திலிருந்து ரெண்டு பேரும் தனித்தனி காரில் புறப்பட்டு விட்டனர். ஆனால் வீட்டுக்கு ஓபிஎஸ் மட்டுமே வந்திருக்கிறார். எடப்பாடியோ வீடடுக்கு வராமல், ஜெயக்குமாரை சந்திக்க புழல் சிறைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த தகவலை அறிந்துதான் கோபப்பட்டார் ஓபிஎஸ். தம்மிடம் எடப்பாடி பொய் செல்லியிருக்கிறாரே என்ற கோபம். அதனால் தான் அந்த டென்சன்' என்று கோபத்துக்கான காரணத்தை நம்மிடம் சொன்னார்கள்.

நம்மிடம் பொய் சொல்லி விட்டு ஜெயக்குமாரை சந்திக்க எடப்பாடி செல்கிற தகவல் உண்மைதானா என்பதை அறிய, தனது ஆதரவாளர் ஒருவரிடமும் ஓபிஎஸ் விசாரிக்க சொல்ல, அந்த ஆதரவாளரும் விசாரித்து விட்டு , உண்மைதான் அண்ணே என்று சொல்ல, கொந்தளித்து விட்டாராம் ஓபிஎஸ்.. தகவல் உண்மை என அறிந்து தனது ஆதரவாளரிடம் புலம்பி தள்ளினாராம்.

'எடப்பாடியை எவ்வளவோ நம்பினேன். ஆனா, நம்பினவங்களுக்கு துரோகம் செய்றதே வேலையா வெச்சிருக்காரு. ஜெயக்குமாரை சந்திக்கப் போறேன்னு என்னிடம் சொன்னா என்ன கெட்டு விடப்போகிறது? நானும் புழலுக்கு வந்திருப்பேன் இல்லே! நான் வந்தால் அவருக்கு என்ன இடைஞ்சல்? எதுவும் இல்லையே. இரண்டு பேரும் போய் சந்தித்தால் தான் ஜெயக்குமாருக்கும் தெம்பா இருக்கும். வீட்டுக்கு போறேன்னு என்னிடம் பொய் சொல்லிட்டு எதற்கு புழலுக்கு போகணும்? பொய் சொல்ற விசயமா இது? எடப்பாடி சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டு இருந்தேன். ஆனா, அவரோ நம்பிக்கைக்குரியவராக இல்லை. எனக்கே நம்பிக்கையில்லாதவராக இருக்கிறார்னா தொண்டர்களுக்கு எப்படி உண்மையா இருப்பாரு? இனிமேல் தலையாட்டும் பொம்மையாக நான் இருக்கப்போவதில்லை. இனி நான் யாருன்னு எடப்பாடிக்கு காட்டுறேன் ' என்று பொங்கி தீர்த்து விட்டாராம் ஓபிஎஸ்

அரசியலில் எவ்வளவு நெருக்கடிகள், பிரச்சனைகள் வந்தாலும் அமைதியாக ஹேண்டில் பண்ற ஓபிஎஸ்சா, இவ்வளவு ஆவேசப்படுகிறார்? என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரவி வருகிறது.

இந்த நிலையில், ஜெயக்குமாரை சிறையில் சந்திக்க, ஓபிஎஸ் ஆலோசித்து வருகிறார். ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்து விட்டால் அவரை வீட்டில் சந்தித்து பேசுவார் . ஜாமீன் கிடைக்காது போனால் சிறைக்கு சென்று சந்திப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Tags

Next Story