பாப்பாரப்பட்டி பாரதமாதா நினைவாலயத்தை, அரசு கோயிலாக திருத்தம் செய்ய வேண்டும்
பாப்பாரப்பட்டி பாரதமாதா நினைவாலயத்தை, அரசு கோயிலாக திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தினார்.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் அமைந்துள்ள வளாகத்தில், ரூ.1.50 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட பாரதமாதா நினைவாலயத்தில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், பூஜைகளை நடத்தி வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத் கூறியதாவது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, அப்போது இருந்த தியாகிகள், நண்பர்கள் உதவியுடன் இடம் வாங்கி, அந்த இடத்திலிருந்து, விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த இடத்தில், பாரதமாதா ஆலயத்தை அமைக்க வேண்டும் என விரும்பி, அப்போதைய காங்கிரஸ் தலைவர் தேசபந்து என அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாமஸ அழைத்து வந்து பாரதமாதா ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து உடல் நலக்குறைவால் அவர் இறந்து விட்டார்.
இதைத் தொடர்ந்து, சுப்பிரமணிய சிவாவின் கனவு நனவாக, குமரி அனந்தன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், ஆன்மிக அமைப்பினர் உள்ளிட்டோர் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயத்தை அமைக்க வேண்டும் என தொடர்ந்து, வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு பாரதமாதா ஆலயத்தை கட்டி அமைத்துள்ளது. ஆனால், இந்த ஆலயம் சுப்பிரமணிய சிவா விரும்பியவாறு அமைக்காமல், நினைவாலயம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதை நினைவாலயம் என யார் (அதிமுக, திமுக) கூறினாலும் தவறு தான். ஆகவே, நினைவாலயம் என்பதை கோயிலாக அரசு திருத்தம் செய்ய வேண்டும். மேலும், இக்கோயிலில் அபிஷேகம், பூஜைகள், வழிபாடுகள் நடத்திட வேண்டும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.