ஏரியூரில் ரூ.3.02 கோடி கட்டிடப்பணி: தருமபுரி கலெக்டர் துவக்கிவைத்தார்
ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.02 கோடி மதிப்பிலான கட்டிடப்பணிகளை கலெக்டர் திவ்யதர்சினி, தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து 10 ஊராட்சிகள் பிரித்து புதியதாக ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட்டது. கோடிஅள்ளி, அஜ்ஜன அள்ளி, சுஞ்சல்நத்தம், இராமகொண்டஅள்ளி, மஞ்சாரஅள்ளி, பத்ரஅள்ளி, கொண்டையனஅள்ளி, பெரும்பாலை, நாகமரை, தொண்ணகுட்டஅள்ளி உட்பட 10 ஊராட்சிகளை ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் கொண்டிருக்கிறது.
ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவல் பணிகள் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த நிலையில், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.02 கோடி மதிப்பிலான புதிய கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி, இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது கூடுதல் ஆட்சியர் /மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வைத்தியநாதன், ஏரியூர் ஒன்றியக்குழுத்தலைவர் பழனிசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சி.வி.மாது, ஒன்றியக்குழு துணைத்தலைவர் தனபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.