/* */

தர்மபுரி மாவட்டத்தில் ஏறுமுகத்தில் தக்காளி விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் ஏறுமுகத்தில் தக்காளி விலை விவசாயிகள் மகிழ்ச்சி.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் ஏறுமுகத்தில் தக்காளி விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் விற்பனைக்கு வைத்து உள்ள தக்காளி.

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தக்காளிகளை விவசாயிகள் பயிரிடுகின்றனர். பாலக்கோடு பகுதியில் செயல்படும் தக்காளி சந்தையில் நாள்தோறும் வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தக்காளி ஏற்றுமதியும் குறைந்துள்ளதால் தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விலை கடந்த ஒரு ஆண்டாக 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது.

சென்ற வாரம் தக்காளி விலை கிலோ 12 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் ஆவணி மாதம் பிறந்ததையடுத்து சுபநிகழ்ச்சிகள் மற்றும் திருமண முகூர்த்த தினங்கள் வருவதால் தக்காளி விலை தற்போது கடந்த இரு தினங்களாக 18 ரூபாய் வரை அதிகரித்து விற்பனையாகிறது. வெளி மாவட்டங்களில் தக்காளி விலைக்கும் தர்மபுரி மாவட்டத்தில் விலைக்கும் அதிக அளவு வித்தியாசம் காணப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தோராயமாக ஒரு கிலோ தக்காளி 18 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்றால் வெளி மாவட்டங்களில் 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது.

இதற்கான காரணம் போக்குவரத்து செலவு மற்றும் இடைத்தரகர்கள் கமிஷன் காரணமாக மற்ற மாவட்டங்களில் தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது. இத்தொழிலில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஈடுபடுவதால் இடைத்தரகர்களும் வெளி மாவட்டத்திற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கிறது. தக்காளி சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்ய தக்காளியை அன்றைய சந்தை விலைக்கு விற்று வருகின்றனர். இதன்காரணமாக விவசாயிகளுக்கு குறைந்த அளவே லாபம் கிடைக்கிறது.

மேலும் விலை குறைந்த காலத்தில் அதிக அளவு நஷ்டம் ஏற்படுவது விவசாயிகளுக்குத் தான். கடந்த சில தினங்களாக தக்காளி விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் விவசாயிகள் ஒன்றிணைந்து தக்காளிகளை வெளிமாவட்டங்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் ஏற்றுமதி செய்யப்படும் பொழுது அவர்களுக்கு கிடைக்கும் லாபம் அதிகரிக்கும். தக்காளியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க முன்வருவது இல்லை.

தக்காளியில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க அரசு சார்பில் நடமாடும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த வாகனம் நடைமுறையில் உள்ளதா, இல்லையா என்ற குழப்பமும் விவசாயிகளிடம் நிலவி வருகிறது . எனவே வேளாண் துறையினர் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிக்கும் நடமாடும் வாகனத்தை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Updated On: 20 Aug 2021 12:45 PM GMT

Related News