அரூர் அருகே மாணவியை கடத்திச் சென்ற இளைஞர் போக்ஸோவில் கைது
அரூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடத்தி சென்றுள்ளார். தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால், அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர்(20) கூலித்தொழிலாளி தனது மகளை கடத்தி இருக்கலாம் என சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பாஸ்கர் அதே பகுதியில் உள்ள ஒரு மலை கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்றதாக பாஸ்கரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து சிறுமியை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் பத்தாம் வகுப்பு மாணவியை வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.