தருமபுரி: வனப்பகுதியில் கழிவுகளை கொட்டியவருக்கு அபராதம் விதிப்பு
வனப்பகுதியில் கழிவுகளை கொட்டியவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்
HIGHLIGHTS
அரூர் அருகே வனப்பகுதியில் வாழை மரத்தின் கழிவுகளை கொட்டியவருக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூர்சிந்தல்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் காப்புக் காடு உள்ளது. இந்த காப்புக் காட்டில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இந்த நிலையில், இங்குள்ள காப்புக் காட்டில் அரூர் நகர் பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமப் பகுதியில் இருந்து பயனற்ற நெகிழிப் பொருள்கள் மற்றும் குப்பைகளை கொட்டுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மொரப்பூர் வனச்சரகர் மு.ஆனந்தகுமார் தலைமையில், வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மினி சரக்கு வாகனத்தில் வாழை மரத்தின் கழிவுகளை எடுத்து வந்து காப்புக் காட்டில் கொட்டியது தெரியவந்தது. தொடர்ந்து, காப்புக்காட்டில் வாழை மரத்தின் கழிவு கொட்டியதாக எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பழனி (59) என்பவருக்கு வனத்துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.