செம்மரம் வெட்டச் சென்ற சித்தேரியை சேர்ந்தவர் தலை துண்டிப்பு: அதிர்ச்சி தகவல்

செம்மரம் வெட்டச் சென்ற சித்தேரியை சேர்ந்தவர் தலை துண்டிப்பு: அதிர்ச்சி தகவல்
செம்மரம் வெட்டச் சென்ற சித்தேரியை சேர்ந்தவர் தலை துண்டித்து கடப்பா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள சித்தேரி மலைப் பகுதிகளை சேர்ந்த சித்தேரி, சிட்லிங் அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களிலிருந்து ஆண்கள் இளைஞர்கள் செம்மரம் வெட்டி கடத்தும் தொழிலுக்கு புரோக்கர் மூலமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தேரி மெதிக்காடு பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் உயிரிழந்த நிலையில், இவரது உடல் நேற்று முன்தினம் இரவு சித்தேரி பேருந்து நிறுத்தத்தில் மர்ம நபர்கள் வீசிச் சென்றனர்.

இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் ராமனை ஏற்றி வந்த சொகுசு காரின் உரிமையாளர் சண்முகம் மற்றும் ஓட்டுநர் பார்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நபர்களில் மேலும் ஒருவரின் தலை பகுதி இரண்டாக வெட்டப்பட்டு இறந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா மருத்துவமனையில் உள்ளதாக உறுதியாகியுள்ளது.

இவர் சித்தேரி மலைப்பகுதியை சேர்ந்த அலகூர் அருகே புள்ள ஜக்கம்பட்டியை சேர்ந்த செவத்தான் மகன் பாலகிருஷ்ணனன் (44), எனவும் இவருக்கு மங்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 3 மகளும் உள்ளனர்.

மலை கிராமங்களில் போதிய அடிப்படை வசதி இல்லாததால், மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி புரோக்கர்கள் மூலம் ஆந்திரா மாநில வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

மலைவாழ் பகுதியின் ஆண்கள், இளைஞர்கள் தங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கோவை, திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட பெரும் நகரங்களுக்கு கூலி வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு ஆந்திரா வனப்பகுதியில் செம்மமரம் வெட்ட சென்றுள்ளார்கள்.

கடந்த வாரத்தில் மட்டும் 50 க்கும் மேற்பட்டோர் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றுள்ளதாக மலைவாழ் பழங்குடியினர் மக்கள் மத்தியில் கூறப்படுகிறது.

மேலும் சித்தேரி மலைவாழ் பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டும் இளைஞர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆந்திர மாநிலத்தில் உள்ள வனத்துறையின் கட்டுப்பாட்டிலும் பல்வேறு நபர்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகக்பட்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது.

இந்நிலையில் ராமன் பாலகிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் அவருடன் சென்றதாக கூறப்படும் அரசநத்தம் கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் மோகன் என்பவர் கால் பகுதியில் காயங்களுடன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மரம் வெட்டுவதற்கு ஆட்களை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்ட சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ரகு வயது 28 என்பவரை அரூர் காவல் தனிபிரிவு படையினர் தேடி வருகின்றனர்.

சந்தேகத்திற்கு இடமான முறையில் நேற்றுமுன்தினம் இறந்த ராமன் என்பவரின் உடற்கூறு ஆய்வுக்குப்பின், உடல் நேற்று இரவு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராமனின் மர்ம மரணம் குறித்து அரூர் காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான மரணம் என்று பிரிவு 174-ன் படி குற்ற வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story