/* */

4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை இம்மியளவும் பிசகாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றார் முதல்வர்

HIGHLIGHTS

4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
X

முதல்வர் மு.க.ஸ்டாலின்(பைல்படம்)

4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை நாங்கள் இம்மியளவும் பிசகாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிபடுத்த ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.

மக்களாகிய நீங்கள் வாக்களித்த காரணத்தால் தான் இந்த முதல்வர் பொறுப்பில் நான் உட்கார்ந்திருக்கிறேன். நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் இன்றைக்கு நான் கோட்டையில் உட்காருவதற்கு அடித்தளமாக அமைந்தது. இவர்களுக்கு வாக்களித்தால், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள். மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்வார்கள் என்று நம்பி நீங்கள் வாக்களித்திருக்கிறீர்கள்.

நான் அதை வெளியிட்ட போது, தலைவர் கலைஞர் பாணியில் 'சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம்'- என்று சொன்னேன். ஆட்சிக்கு வந்து இன்றோடு 4 மாதங் கள்தான் கடந்துள்ளன. இந்த 4 மாதங்களுக்குள் சொன்னவற்றில் பெரும்பாலானவற்றைச் செய்து விட்டோம். 505 வாக்குறுதிகளைத் தந்தோம். அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டோம். என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை நீங்களே பாருங்கள்

மே 7-ந்தேதி பதவியேற்ற சில மணி நேரத்திலேயே ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டேன். 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரண நிதியுதவி. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண "உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்" துறை. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதல்- அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு. இந்த ஐந்தில் முதல் நான்குமே திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை.

இதன் தொடர்ச்சியாக, வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், முதன்முறையாக வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்துவது..'நமக்கு நாமே' திட்டத்தை உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்துவது.

"இயற்கை வேளாண்மை வளர்ச்சித்திட்டம்" என்ற உன்னதத் திட்டம் நடப்பு 2021-22-ம் ஆண்டு செயல்படுத்துவது. அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைத்தல் மற்றும் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்தல். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், வெள்ளிப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 2 கோடி ரூபாய் மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ. 1 கோடி வழங்குதல்.

பத்திரிகையாளர்கள்; இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டுவழிச் சாலைத் திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், பொதுமக்கள்மீது போடப்பட்ட 5,570 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் தாக்கல் செய்தல் மற்றும் தீர்மானம் நிறைவேற்றுதல். கொரோனா சிகிச்சை பணியில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் கொரோனா இழப்பீட்டுத் தொகை.

கொரோனா நோய்த் தொற்றால் காவல்துறையில் உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணத்தொகை. குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் 'ஸ்மார்ட் கார்டு' வழங்குதல். இத்திட்டத்தின்கீழ் 5 லட்சத்து 49 ஆயிரத்து 505 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசிற்கு ஆலோசனைகளை வழங்கிட 'முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு'அமைக்கப்பட்டுள்ளது. பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து தவறாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டது.

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்வு. இப்படி, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சட்டசபை விவாதங்களை முழுமையாக கவனித்தவர்களுக்கு நான் சொல்வது முழு உண்மை என்பது தெரியும்.

வேளாண் நிதி நிலை அறிக்கையில் 23 வாக்குறுதிகளும்; அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 64 வாக்குறுதிகளும்; இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. மொத்தம் 202 வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன என்ற மகிழ்ச்சியான செய்தியை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்.

இன்னொரு முக்கியமான செய்தியை நான் சொல்ல வேண்டும். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல். இப்படி இடம் பெற்றவர்களுக்குக் கட்டணம் முழுமையாகச் செலுத்த வேண்டியது இல்லை.

அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு. திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி, கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும்.

கொரோனாவால் தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை. தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர் நலனைப் பேணிட வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

'தமிழ்நாடு ஆதி திராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம்'என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கச் சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கை. பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறையினர் "முன்களப் பணியாளர்"களாக அறிவிப்பு.

அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கான சிறப்பு ஊக்கத்தொகை 5,000 ரூபாய் ஆக உயர்வு. கொரோனா தொற்றால் உயிரிழந்த அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறையினர்களுக்கான இழப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்வு. தமிழன், திராவிடம் ஆகிய சொற்களை அரசியல் களத்தில் முன்னெடுத்து போராடிய அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் பெருமையைப் போற்ற 14 அறிவிப்புகள். பாட்டுக்கொரு புலவன் பாரதியை போற்றும் வகையில் 14 அறிவிப்புகள்.

சமூகநீதியை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்கக் குழு. 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பலியான சமூக நீதிப் போராளிகளின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும். மக்களைத் தேடி மருத்துவம்; இந்தியாவிலேயே முன்மாதிரித் திட்டமான 'மக்களைத் தேடி மருத்துவம்' தொடக்கம். எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு அரசு மரியாதை, கோவில்பட்டியில் சிலை, இடைச்செவலில் அவர் படித்த பள்ளி புதுப்பிப்பு. தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்துச் சிறப்பிக்கும் வகையில், 5 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய 'இலக்கிய மாமணி' விருது உருவாக்கம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதெமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி, கலைஞரின் கனவை நனவாக்கும் வகையில் அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் - பெண் ஓதுவார் நியமனம். 'தகைசால் தமிழர்' விருது உருவாக்கப்பட்டு, முதல் ஆண்டில் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் விடுதலைப் போராட்டத் தியாகியுமான தோழர் என். சங்கரய்யாவுக்கு நேரில் வழங்கப்பட்டது.

சிவகளை ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தமிழர் நாகரிகத்தின் வேர்களைத் தேடி இந்தியத் துணைக்கண்டம் மற்றும் உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு. இவை அனைத்துக்கும் மேலாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து சமூகநீதி உறுதிமொழி ஏற்பு. இவை எல்லாம் நாங்கள் அறிவிக்காதது. ஆனால் செய்து கொடுக்கப்பட்டவை. சொன்னதைச் செய்தவர்கள் மட்டுமல்ல - சொல்லாததையும் செய்து கொடுத்தவர்கள் நாங்கள்

505 வாக்குறுதிகளில் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக்கண்டத்திலேயே தி.மு.க. அரசாகத்தான் இருக்கும். இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம்; எப்போதும் இப்படித்தான் இருப்போம். எல்லா நாளும் இப்படித்தான் செயல்படுவோம்.

இப்போது அறிவித்தது போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை நானே உங்களிடம் இதைச் சொல்வேன். நிறைவேற்றிய வாக்குறுதிகளை நானே உங்களுக்கு பட்டியல் போட்டுக் காண்பிப்பேன். வாக்களித்த மக்களை ஐந்து ஆண்டுகள் கழித்துத்தானே பார்க்கப் போகிறோம் என்று அலட்சியமாக இருப்பவன் இல்லை நான். என்னை இயக்கிக் கொண்டு இருப்பது மக்களாகிய நீங்களும் எனது மனசாட்சியும்தான். நீங்கள் உத்தரவிடுங்கள். உங்களுக்காகவே உழைக்கக் காத்திருக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Updated On: 25 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!