தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றால் கோர்ட் போவோம்: ஜெயக்குமார்

தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றால் கோர்ட் போவோம்: ஜெயக்குமார்
X
உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வரும் என்று, முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தேர்தல் விதிமீறல்கள். சமூக வலைதளங்களில் தவறான பதிவுகள் பகிரப்படுவது தொடர்பாக, சென்னை மாநகரக் காவல் ஆணையரிடத்தில், அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக வெற்றியைப் பறித்து விடவேண்டும் என்ற நோக்கில், அத்தனை அநியாயங்களையும் திமுக அரகேற்றி வருகிறது. வேட்பாளர்கள் கடத்தல், வாக்காளர்களுக்குப் பணம் அளித்தல், இப்போதுகூட வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்கள். அப்படிப் பிடிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்றால் இல்லை.

பறக்கும் படை வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பறக்கும் படையைப் பொறுத்தவரையில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில், பதுங்கும் படையாகத்தான் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குடோனைப் பிடிப்பது, அண்டா, குண்டா என்று என்னென்ன பொருட்கள் உள்ளதோ அவை அத்தனையும் அங்குப் பதுக்கிவைத்து, வாக்காளர்களுக்கு லஞ்சம் அளிக்கும் வகையில், அதனுடன் பணத்தை அளிக்கும் செயலில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இவை அனைத்துத் தகவல்களையும் நாங்கள் முறையாகத் தகவல் அளித்தும் கூட, தேர்தல் ஆணையமும் சரி, தேர்தல் நடத்தும் அலுவலரும் சரி நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் இதனைத் தட்டி கேட்காமல், வழக்குப் போடாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு, ஒரு செயலற்ற ரோபோ பொம்மைபோல இன்றைக்கு தேர்தல் ஆணையம் இருப்பது கண்டிக்கத்தக்கது.

ரோபோ பொம்மையின் ரிமோட் திமுக தலைவர் ஸ்டாலினிடம் உள்ளது. அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் அந்த ரோபோ பொம்மை கேட்கும். ரோபோ பொம்மைபோல்தான் இன்றைக்குத் தேர்தல் ஆணையம் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கைக் கிடையாது.

கொங்கு மண்டலத்தில் ரவுடிகள் இறக்கி விடப்பட்டுள்ளார்கள். அதுபோல சென்னையிலும் ரவுடிகள் இறக்கி விடப்பட்டுள்ளார்கள். அவர்கள் இன்றைக்கு பூத்தை கைப்பற்றுதல், கலவரத்தை ஏற்படுத்துதல் போன்ற செயல்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள். இதனை எல்லாம் தடுக்கவேண்டும் என்று எங்களுடைய சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்கள். இனியும் காலம் தாழ்த்தாமல் மாநில தேர்தல் ஆணையமும் சரி, காவல்துறையும் சரி, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். முக்கியமாக இரண்டு விஷயங்களைக் காவல் ஆணையரிடம் தெரிவித்துள்ளோம்.

தேர்தல் ஆணையமும், காவல்துறையும் நீதிமன்றத்தில் பதில் சொல்லவேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டாம். இதைத்தான் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். தமிழக மக்களும் எதிர்ப்பார்க்கிறார்கள். நீங்கள் ஒருதலைபட்சமாக செயல்பட்டால் நீதிமன்ற கூண்டில் நிற்கவேண்டிய நிலை உங்கள் எல்லோருக்கும் ஏற்படும். இவ்வாறு, ஜெயக்குமார் தெரிவித்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி