காவலர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

காவலர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

பைல் படம்

காவலர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் :

அண்மையில் கொண்டுவரப்பட்ட நடைமுறையின்படி, காவலர்கள் வாரத்தில் ஒருநாள் விடுப்பு எடுப்பதற்கு மிகை நேரப்பணி ஊதியம் பிடித்தம் செய்யப்படுகிறது எனும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

ஓய்வின்றித் தொடர் காவல் பணியில் ஈடுபடும் காவலர்களது உடற்சோர்வு, மனஅழுத்தத்தைப் போக்கவும், குடும்பத்தோடு செலவிட அவர்களுக்கு நேரத்தை வழங்கும் விதமாகவும் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும்.


எவ்வித நேரக்கட்டுப் பாடுமின்றி இரவு, பகலாகக் காவல் பணியாற்றி வரும் காவலர்களுக்கு ஊதியத்தோடு கூடிய ஒருநாள் விடுப்பு வழங்குவதுதான் அவர்களை இளைப்பாற்றும் தகுந்த நடவடிக்கையாகும்.

மிகை நேரப்பணி ஊதியத்தை (ETR) துறப்பதாக இருந்தால் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் என நிபந்தனையோடு அறிவிப்புச் செய்வது எவ்விதத்திலும் காவலர்களுக்கு நன்மை பயக்காது.

இன்றைய பொருளாதாரச்சூழலில் ஊதியத்தை இழந்து விடுப்பு எடுப்பதை எந்தக் காவலரும் ஏற்க மாட்டார்கள்.

ஊதியத்தை இழந்து விடுப்பு எடுத்துக்கொள்வது ஏற்கனவே நடைமுறையிலிருக்கையில், இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் நடைமுறையும் அதிலிருந்து மாறுபடவில்லை

என்னும் போது ஒரு நாள் விடுப்பு அறிவிப்பு காவலர்களுக்கு எவ்விதப்பயனையும் தராத வெற்றுச்சடங்காகப் போய்விடும்.

காவலர்களின் உடல்நலனையும், மனநலனையும் மனதில்கொண்டு காவலர்களுக்கு விடுப்பு எடுப்பதற்கு மிகை நேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story