மாயமான மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்
காணாமல்போன தமிழக மீனவர்களை மீட்டுத்தரக்கோரி மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு நேரில் கடிதத்தை வழங்கினார்.
HIGHLIGHTS
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்கள் லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறினால் காணாமல் போனதையடுத்து, அவர்களை மத்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டுத்தர வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடந்த 16-ஆம் தேதியன்று கடிதம் எழுதியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, புதுடெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கினார். தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது மத்திய அமைச்சர், உடனடியாக தமிழக மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த கடலோர காவல் படையினரின் தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடுல் பணி துரிதப்படுத்தபடும் என்று தமிழக முதலமைச்சரிடம் தெரிவிக்குமாறு டி.ஆர்.பாலுவிடம் கூறியுள்ளார்.