ரூ.200 கோடி நிலுவை தொகையை வசூலிக்க குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை

ரூ.200 கோடி நிலுவை தொகையை வசூலிக்க குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை
ரூ.200 கோடி நிலுவை தொகையை வசூலிக்க குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் இரண்டாம் அரையாண்டு வரியான ரூ. 475 கோடியை வசூலிக்க குடிநீர் வடிகால் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. அதே போல 200 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ள நிறுவனங்கள் மீது ஜப்தி, சீல் வைப்பு நடவடிக்கை எடுக்க இரண்டு துணை ஆட்சியர்கள் 6 தாசில்தார்களை நியமித்து வாரியம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக 14 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியாக தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீர் ஒரு பக்கம் இருந்தாலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னையின் குடிநீர் தேவையை பற்றாக்குறை இல்லாமல் பூர்த்தி செய்கிறது. சென்னையில் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. வாரியத்தின் வருவாய் ஆண்டுக்கு 950 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணம் 570 கோடி ரூபாய். இதர உள்ளாட்சிகள், தொழிற்சாலைகள் மற்றும் லாரி குடிநீர் வழங்குவது வழியாக 380 கோடி ரூபாய் இன வருவாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டு மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு என நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் வரியாக ஆண்டு சொத்து மதிப்பில் ஏழு சதவீதமும் கட்டணமாக மாதம் 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல வணிகம் சார்ந்த கட்டிடங்களுக்கு வரி ஏழு சதவீதம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வணிக தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.

அதாவது 500 இருக்கை கொண்ட திரையரங்கு, திருமண மண்டபத்திற்கு கழிவு நீர் கட்டணமாக மாதம் 4,400 ரூபாயும்,குடிநீர் கட்டணம் ஆயிரம் லிட்டருக்கு 60 ரூபாய் என்ற விதத்தில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர். குடிநீர் இணைப்பு வழங்காத பகுதிகளில் வரி மட்டும் செலுத்த வேண்டும். 2022-23 இரண்டாம் அரையாண்டில் 475 கோடி ரூபாய் வசூலிக்க வாரியம் திட்டமிட்டுள்ளது. பருவ மழையால் வசூல் மந்தமாக நடந்தது மழை நின்ற நிலையில் வசூலை வாரியம் தீவிரப்படுத்தி உள்ளது. முதல் அரையாண்டில் நடப்பு நிலுவை, அபராதம், அட்வான்ஸ் என சேர்த்து 480.43 கோடி ரூபாய் வசூல் ஆனது. இது 2021 22 அரையாண்டை விட 110 கோடி ரூபாய் அதிகமாகும். விழிப்புணர்வு, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, சீல் வைப்பு போன்ற நடவடிக்கையால் இவ்வளவு வசூல் கிடைத்தது.

அதேபோல இரண்டாம் அரையாண்டும் அதிரடி நடவடிக்கையால் அதிகமாக வசூலிக்க குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக வருவாய் துறையில் இருந்து இரு துணை ஆட்சியர்கள், ஆறு தாசில்தார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வசூல் அதிகரித்தால் குடிநீர் வாரியத்தின் நிதிநிலை ஓரளவு சீராகும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பல்வேறு நடவடிக்கையால் முதல் அரையாண்டு அதிக வரி வசூல் கிடைத்தது. பல தனியார் நிறுவனங்கள் அரசுத்துறைகள் 200 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்துள்ளனர்.

நிலுவை வரியை வசூலிக்க குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி, சீல் வைப்பு போன்ற நடவடிக்கையில் ஈடுபட அதிகாரிகள் அதிரடி முடிவு செய்துள்ளனர். லட்சக்கணக்கான ரூபாய் வரி வாங்கி வைத்துள்ள நிறுவனங்கள் மீது மூன்று நாள் அவகாசத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நோட்டீஸ் வழங்கப்படும். அடுத்து சென்னை குடிநீர் வாரிய சட்டப்பிரிவு 74 ன்படி ஜப்தி நோட்டீஸ் வழங்கப்படும். இதில் வரிக்கு இணையாக அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் போலீஸ் பாதுகாப்புடன் பரிந்துரை செய்யப்படும்.ஒவ்வொரு நுகர்வோருக்கும் வரி கட்டணம் மற்றும் நிலுவைத் தொகை தொடர்பாக அவர்கள் மொபைல் போனுக்கு தமிழ் ஆங்கில மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.குரல் பதிவும் அனுப்பப்படும். தகவல் தெரிவிக்கப்படுகிறது. துண்டு பிரசுரம் ஆட்டோ பிரசுரம் பேனர் கட்டுவது என விழிப்புணர் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Tags

Next Story