வாடகை பிரச்சனையில் சிறுமியின் மண்டை உடைப்பு: வீட்டு உரிமையாளர் கைது
கைது செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர்.
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு, 21 வயதில் மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர்.
மகன், பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் நிலையில், மகள் அங்குள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த, 16ம் தேதி இவர்கள் குடியிருக்கும் வீட்டை இரவோடு இரவாக காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் ரமேஷ், சுமதியிடம் கூறியுள்ளார். அதற்கு தான் முன்பணமாக கொடுத்த 50 ஆயிரம் ரூபாயை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
அதை கொடுக்க மறுத்த ரமேஷ் மற்றும் அவரது மகன்கள், வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி, சுமதியை ஆபாசமாக பேசி உள்ளனர்.
இதனை தட்டிகேட்ட சுமதியின் மகளிடம், ரமேஷின் இரண்டாவது மகன் அத்துமீறி நடந்ததுடன், ஆபாசமாகவும் பேசி உள்ளார்.
இது தொடர்பாக, கடந்த 17ம் தேதி சுமதி அளித்த புகாரை சேலையூர் போலீசார் விசாரிக்காமல் அலைக்கழித்து வந்த நிலையில், இரண்டு நாட்களக சுமதி வீட்டின் மின் இணைப்பை ரமேஷ் துண்டித்துள்ளார்.
இது குறித்து இன்று காலை சுமதி மீண்டும் கேட்டபோது, ரமேஷ் ஆபாசமாக பேசியதால் இருதரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சுமதியின் மகளை ரமேஷ் தாக்கியதில், சிறுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு மூன்று தையல் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து, காயமடைந்த சிறுமி அளித்த புகாரின்பேரில், சேலையூர் போலீசார் 294(b), 324, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வீட்டு உரிமையாளர் ரமேஷை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu