விசிறி விற்கும் மூத்த தம்பதிக்கு மளிகைபொருள்கள் வழங்கிய அரியலூர் எஸ்பி
விசிறி விற்பனை செய்யும் தம்பதியருக்கு, அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கிராமத்தில் வசித்து வருபவர் குஞ்சிதபாதம். இவரது மனைவி வசந்தா இருவரும் வயதான தம்பதியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தாங்கள் உயிர்வாழ விசிறி செய்து அதை விற்பனை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த நிலையில், விசிறி விற்பனை இல்லாததால் வருமானம் இன்றி தவித்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தா.பழூர் தோப்பு தெருவில் உள்ள குஞ்சிதபாதம் - வசந்தா தம்பதியரை நேரில் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், பாய் தலையணை, பிளாஸ்டிக் வாலி உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும் தா.பழூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகதீசன் தேவையான உதவிகளை செய்வார் என உத்தரவாதம் கொடுத்தார். குஞ்சிதபாதம் மற்றும் வசந்தா தம்பதியினர் மாவட்ட காவல்துறைக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.