பேருந்து சேவையை துவக்கி வைத்து மக்களுடன் பயணித்த அமைச்சர் சிவசங்கர்
அரியலூர் - சுண்டக்குடி வழித்தடத்தில் பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து அதே பஸ்சில் மக்களுடன் பயணித்தார்.
HIGHLIGHTS
தமிழக முதலமைச்சர் பெண்களின் நலன் காக்கும் வகையில் நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவித்ததை தொடர்ந்து கூலிவேலை, வணிக நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்கள் அனைவரும் தற்போது நகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். மேலும் பொதுமக்களின் வசதிக்காக புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் அம்மாகுளம் வழியாக அரியலூர் - சுண்டக்குடி வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேருந்து சேவையின் மூலம் அரியலூரிலிருந்து அம்மாகுளம், ரெங்கசமுத்திரம், சுப்புராயபுரம், பள்ளகிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களில் புதியதாக பேருந்து வசதிகளையும், பொய்யூர், இடையாத்தங்குடி, ஏழேரி, பனங்கூர், வாழைக்குழி, ஆலந்துறையார்கட்டளை, சுண்டக்குடி ஆகிய ஊர்களில் கூடுதலாக பேருந்து வசதியும் பெறும்.
அரியலூர்-சுண்டக்குடி இடையே காலை 6.50 மணி மற்றும் மாலை 4.40 மணி ஆகிய வேளைகளிலும், சுண்டடிக்குடியிலிருந்து அரியலூருக்கு காலை 8.10 மணி மற்றும் மாலை 5.50 மணி ஆகிய வேளைகளிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்து சேவை இயக்கப்படுகிறது.
இப்பேருந்து சேவையினை பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் சிறப்பான முறையில் இயக்கிட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்து, பேருந்தில் மக்களுடன் 5 கி.மீட்டர் தூரம் பயணம் செய்தார்.
இந்நிகழ்வில், அரசு போக்குவரத்து கழக கோட்டமேலாளர் இராமநாதன், கிளைமேலாளர் செந்தில்குமார் கலந்துகொண்டனர்.