மேகதாது அணை கட்ட அனுமதிக்காதே: கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
தமிழகத்திற்கு காவிரி நதி மூலம் கிடைத்து வரும் தண்ணீரை, மேலும் தண்ணீர் வராமல் தடுக்கும் நோக்கோடு கர்நாடகா எல்லையில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு முடிவு செய்து சூசகமாக மத்திய அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருக்கிறது.
அணை கட்டப்படுமானால் காவிரியை நம்பி இருக்கக்கூடிய தமிழகத்தின் 12க்கும் மேற்பட்ட டெல்டா மாவட்டங்களும் சென்னை உள்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் குடிநீர் பிரச்சினைக்கும், பாசன வசதிக்கும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். ஆகவே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமானூர் ஒன்றியக் குழு சார்பாக திருமானூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருமானூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். திருமானூர் ஒன்றிய துணைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், பரிசுத்தம், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu