கூட்டணியை உடைத்த எடப்பாடி: அ.தி.மு.க.வை உடைக்க திட்டம் போடும் அண்ணாமலை

கூட்டணியை உடைத்த எடப்பாடி: அ.தி.மு.க.வை உடைக்க திட்டம் போடும்  அண்ணாமலை
கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி உடைத்ததால், அ.தி.மு.க.வை உடைக்க அண்ணாமலை அதிரடி திட்டம் வகுத்துள்ளார்.

பா.ஜ.கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி உடைத்ததால், அ.தி.மு.க.வை உடைக்க அண்ணாமலை அதிரடி திட்டம் வகுத்துள்ளார்.இதற்கான திட்டத்தை மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலிட உத்தரவுக்காக அண்ணாமலை காத்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க.வை தொடர்ந்து விமர்சித்து வந்ததோடு அ.தி.மு.க.வின் பெரும் தலைவர்களான அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை கடுமையாக அண்ணாமலை விமர்சனம் செய்தார். இதனால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பா.ஜ.க. மேலிடம் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் இதுவரை அ.தி.மு.க. உடைந்த போது, ஒவ்வொரு அணியினரும் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை கூறி வந்தனர்.

இதனால் அவர்கள் எப்போதும் நம்மை அனுசரித்து தான் நடப்பார்கள். நம்மை மீறி செல்ல மாட்டார்கள் என்று பா.ஜ.க.மேலிடம் கருதியது. இதனால் அ.தி.மு.க. தலைவர்களை பா.ஜ.க.வின் ஒரு பிரிவினரைப் போலத்தான் கருதி செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் புழுவுக்கும் கோபம் வரும் என்பதைப் போல தங்களை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிச்சாமி, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து விட்டார். இது அ.தி.மு.க.வினர் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க. மேலிட நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்தநிலையில் அ.தி.மு.க.வில் வேலுமணி, தங்கமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், திருவாரூர் காமராஜ், வேலூர் வீரமணி ஆகியோருடன் மறைமுகமாக பா.ஜ.க. மேலிடம் தொடர்பு வைத்துள்ளது. இவர்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிச்சாமியை தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று திட்டமிட்டிருந்தது. இதனால் இவர்கள் அனைவரிடமும் அண்ணாமலை ரகசியமாக தொடர்பு வைத்திருந்தார். இந்தநிலையில் இவர்கள் உள்பட பல பா.ஜ.க ஆதரவாளர்களின் பட்டியலை அண்ணாமலை தயாரித்து வைத்துள்ளார். இதைத் தவிர கூட்டணியில் உள்ள தலைவர்களிடமும் அவர் பேச்சுவார்த்தை முடித்து விட்டார்.

இதனால் அ.தி.மு.க.வை உடைப்பது, கூட்டணியை தங்கள் பக்கம் இழுப்பது ஆகிய திட்டத்தை தயாரித்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் 2 நாட்களுக்கு பொறுமையாக இருக்கும்படி மேலிடம் அண்ணாமலையை கேட்டுக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், அ.தி.மு.க.வுக்கு எதிராக கருத்து தெரிவித்த அமர்பிரசாத் ரெட்டி, வினோஜ் பிசெல்வம் ஆகியோரையும் மேலிடம் கண்டித்துள்ளது. அவர்களை உடனடியாக மன்னிப்பு கேட்க வைத்தது.

இதனால் எடப்பாடி விவகாரத்தில் ஓரிரு நாளில் முக்கிய முடிவுகளை பா.ஜ.க. மேலிடம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் திட்டப்படி அ.தி.மு.க.வை உடைக்க மேலிடம் அனுமதி அளிக்குமா? அல்லது அண்ணாமலையை மாற்றி விட்டு அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணியை தொடருமா என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும் என்கின்றனர் டெல்லி பா.ஜ.க .தலைவர்கள்.

Tags

Next Story