எஸ்.பி., பாலசுப்பிரமணியனை வறுத்தெடுத்த டி.ராஜேந்தர்!

எஸ்.பி., பாலசுப்பிரமணியனை வறுத்தெடுத்த டி.ராஜேந்தர்!
தனது படங்களில் நாயகிகளை தொடாமல் எப்படி காதலிக்க வேண்டும் என்று பலருக்கும் சொல்லிக்கொடுத்தவர் டி.ராஜேந்தர்.

தமிழ் சினிமாவில், பிரபல பாடகரான பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஒரு சில பாடல்களை சிரமப்பட்டு பாடியிருந்தாலும், டி.ராஜேந்தர் இசையில் ஒரு பாடலை பாட 16 மணி நேரம் எடுத்துக்கொண்டுள்ளார். அது என்ன பாட்டு தெரியுமா?

தமிழ் சினிமாவில், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என சினிமாவில் உள்ள அனைத்து துறைகளையும் கற்று தேர்ந்தவர் தான் டி.ராஜேந்தர். ஒரு தலைராகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இவர், அடுத்தடுத்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து நடிகராகவும் இயக்குனராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

அதேபோல் தனது படங்களில் நாயகிகளை தொடாமல் எப்படி காதலிக்க வேண்டும் என்று பலருக்கும் சொல்லிக்கொடுத்தவர் டி.ராஜேந்தர் தான். 1980-90 காலக்கட்டங்களில் இவரது படங்கள் வெளியாவது, இவரது படங்களின் இசை வெளியீட்டு விழா நடப்பது என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோல் தனது படங்கள் மட்டுமல்லாமல், மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ள ராஜேந்தர் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

டி.ராஜேந்தர் இசையில் பல பாடகர்கள் ஹிட் பாடல்களை பாடியிருந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், டி.ராஜேந்தர் படத்தில் பாடல் பாட வந்து தெறித்து ஓடியுள்ளார். 1986-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கம், நடிப்பு, பாடல், இசை, ஒளிப்பதிவில் வெளியான படம் தான் மைதிலி என்னை காதலி. நடிகை அமலா இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 11 பாடல்கள் இடம் பெற்ற இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் டி.ராஜேந்தர் எழுதியிருந்தார்.

8 பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க பாடல் ‘’நானும் உந்தன் உறவை’’ என்ற பாடல். இந்த பாடலை பாட வந்த எஸ்.பி.பி முதலில் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை கேட்ட டி.ராஜேந்தர், இல்லை மீண்டும் ஒருமுறை பாடுங்கள் என்று சொல்ல, மீண்டும் என்.பி.பி அந்த பாடலை பாடியுள்ளார். அதுவும் பிடிக்கவில்லை என்று சொல்லி மீண்டும் மீண்டும் பாடுமாறு கூறியுள்ளார். இதில் எஸ்.பி.பி. பாடுவது அவருக்கு திருப்தியாக இருந்தாலும் டி.ராஜேந்தருக்கு திருப்தி இல்லை.

அப்போது அவரிடம் பாடல் நன்றாக வருமே என்பதற்காக என் பாலு இன்னும் நன்றாக பாடுவாரே என்று டி.ராஜேந்தர் சொல்ல, அப்படியோ என்று உற்சாகத்துடன் எஸ்.பி.பி மீண்டும் ஒருமுறை பாடுவாராம். அடுத்து எஸ்.பி.பி பாட மீண்டும் அதே வார்த்தையை சொல்லி டி.ஆர், பாட சொல்லியுள்ளார். ஒரு கால்ஷீட்க்கு 7 பாடல்கள் பாடியிருந்த எஸ்.பி.பி., இந்த ஒரு பாடலை பாட கால்ஷீட் தாண்டி இரவு 12 மணிவரை சென்றுள்ளது.

அப்போதும் திருப்தி இல்லாத டி.ஆர் இன்னொரு முறை போலாமா பாலு சார் என்று கேட்க, இதுக்கு மேல் என்னால் முடியாது. நான் பாடியதை நீங்கள் கேட்டுப்பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் நாளை மீண்டும் ஒருமுறை வந்து பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார் எஸ்.பி.பி. ஆனால் இந்த பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story