வாரிசு ஆடியோ ரிலீஸ்: 'செல்லம்' விஜயின் ரசிகரான பிரகாஷ்ராஜ்

வாரிசு ஆடியோ ரிலீஸ்: செல்லம் விஜயின் ரசிகரான பிரகாஷ்ராஜ்
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் தானும் விஜய் ரசிகராக மாற்றிவிட்டதாக கூறியுள்ளார்

விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு படத்தில் தான் வில்லனாக நடித்திருப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, சம்யுக்தா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா டிச.24 சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.


இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா, இயக்குநர் வம்சி, ராஷ்மிகா மந்தானா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியது: "தளபதியோடு 14 வருடங்கள் கழித்து பணியாற்றி இருக்கிறேன். வாரிசு என்றால் அது விஜய்தான். தயாரிப்பாளர் தில் ராஜூவின் எல்லா படங்களிலும் நான் நடிக்கிறேன். அவர் படத்திற்காக எதையும் செய்வார். தில்ராஜூ என்னுடைய தம்பி. இவர் போன்ற திறமைக்கு விஜய் போன்ற ஸ்டார்கள் வாய்ப்பு கொடுத்து இருப்பதற்கு நன்றி.

இந்த படத்தில் முதல் காட்சியில் கண்ணோடு கண் வைக்கும் காட்சி, அப்போது அவர் என்ன செல்லம்! இந்த கண்ணைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? என்றார். விஜய், தான் இவ்வளவு அழகாக இருப்பதற்கு காரணம் ரசிகர்கள் என்று முழுமையாக நம்புகிறார். இந்த படத்தில் கிளை மேக்சில் ஒரு காட்சியில் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். முதல் முதலாக நான் மனதார, நிஜமாக சொல்கிறேன்.. நானும் விஜய் ரசிகனாக மாறிவிட்டேன்." இவ்வாறு பிரகாஷ்ராஜ் பேசினார்.

Tags

Next Story