டோனியின் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் சினிமா படம்
![டோனியின் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் சினிமா படம் டோனியின் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் சினிமா படம்](https://www.nativenews.in/h-upload/2022/10/25/1609204-.webp)
சினிமா படம் தயாரிக்கும் டோனி.
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி என்று அழைக்கப்படும் மஹேந்திர சிங் டோனி. இவரால் இந்திய கிரிக்கெட் அணி பல சாதனைகளை செய்துள்ளது. இவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் உலகக் கோப்பையையும் வென்று சாதனை படைத்தது. தற்போது சென்னை சூப்பர் கிங்சின் கேப்டனாக டோனி இருக்கிறார். இதனால் தமிழ்நாட்டுக்கும் டோனிக்கும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. சென்னையில் கிரிக்கெட் மேட்ச் என்றாலே டோனி உற்சாகம் ஆகிவிடுவார்.சென்னைக்கு விளையாட வரும் இவர், தனது மோட்டார் சைக்கிளில் சென்னையை வலம் வருவது வழக்கம். இப்போது டோனியின் சினிமா பட தயாரிப்பு நிறுவனம் தங்களின் முதல் சினிமா படத்தை தமிழில் தயாரிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டோனியும் அவர் மனைவி சாக்ஷியும் இணைந்து சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளனர்."டோனி எண்டர்டெயின்மெண்ட்" என்று இந்த நிறுவனத்திற்கு பெயர். இந்த நிறுவனம் சார்பாக ரோர் ஆப் தி லயன், ப்ளேஸ் டு குளோரி உள்பட மூன்று குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அடுத்து தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி என்று பல மொழியில் படங்களை தயாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். முதலில் தமிழ் படம் ஒன்றை தயாரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த தமிழ் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க போகிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இவர் டோனியை ஹீரோவாக வைத்து 'அதர்வா தி ஆர்ஜின்' என்ற பெயரில் கிராபிக் நாவல் ஒன்றைத் தயாரித்து இருக்கிறார்.
டோனி நிறுவனம் தமிழில் தயாரிக்க இருக்கும் படத்தின் கதையை டோனி மனைவி சாக்ஷு ஒரு வரி கதையாக எழுதி அதை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணியிடம் கூறியுள்ளார். அவர் அந்த ஒருவரி கதையை சினிமாவுக்கு தகுந்தபடி முழு கதையாக மாற்றி எழுதி உள்ளார்.இந்த கதை டோனி, சாக்ஷி தம்பதிக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த கதை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு நல்ல தமிழ் படமாக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளன.
அதோடு டோனி பட நிறுவனம் இயக்குநர்கள், கதாசிரியர்களை சந்தித்துப் பேசி வருவதாகவும் பல மொழிகளில் சினிமா தயாரிக்க உள்ளதாகவும் நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் வகையிலான திரைப்படங்களை தயாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. தமிழில் விஜய் மற்றும் அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி கதாநாயகர்களிடம் டோனி நிறுவனம் பேசி வருவதாவும் விரைவில் அவர்கள் தயாரிக்கும் சினிமா படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu