உலக ஆயுத அரசியலில் முந்தும் அமெரிக்கா

உலக ஆயுத அரசியலில் அமெரிக்கா மீண்டும் முந்துகிறது. இதற்கு ரஷ்யா காரணமாக அமைந்துள்ளது.

Update: 2024-10-18 02:27 GMT

உக்ரைன்- ரஷ்யா போரில் இருந்து அமெரிக்காவின் கவனத்தை திசை திருப்ப, ரஷ்யா மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு ஈரானை துாண்டி விட்டு, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த வைத்தது. இதனால் இஸ்ரேல்- ஈரான் போர் மூளும் வாய்ப்புகள் மிகவும் நெருங்கி விட்டன.

இந்த சூழலில் உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்ப இருந்த தாட் என்ற ஏவுகணை தடுப்பு சாதனத்தை இஸ்ரேலுக்கு வழங்கி உள்ளது. இது பற்றி பார்க்கலாம்.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு "அதிஉயர் பகுதி பாதுகாப்பு முனையம்” எனப்படும் ` (THAAD : Terminal High-Altitude Area Defense) வான் பாதுகாப்பு சாதனம் வழங்கிய செய்தி இனி வளைகுடாவில் பெரும் போர் நடக்கலாம் என்பதன் அறிகுறியாக மாறி விட்டது. ஈரான் இதிலிருந்து தப்புமா என்பது தெரியவில்லை. தப்புவதற்கான வாய்ப்பு பெரிதாக இல்லை.

அமெரிக்காவின் இந்த வான்பாதுகாப்பு அமைப்பு மிக துல்லியமானது. இதுவரை அமெரிக்கா யாருக்கும் கொடுக்காதது. இதனை இயக்க அமெரிக்க படையினர் இஸ்ரேலில் இருப்பார்கள், அவ்வளவு முக்கியமானது. ஆக அமெரிக்கா நேரில் களமிறங்கி விட்டதை இந்த சாதனம் உறுதியாக சொல்கின்றது.

இது 1991 வரலாற்றை திருப்புகின்றது. அமெரிக்கா ஒரு நாட்டை வளைகுடாவில் குறிவைத்து விட்டால் இஸ்ரேலை முதலில் காவலிட்டு காப்பார்கள். சதாம் காலத்தில் அப்படி பேட்ரியாட் சிஸ்டம் கொடுத்து காத்து விட்டுத் தான் ஈராக்கை பொசுக்கினார்கள். இப்போது தாட் சிஸ்டம் கொடுத்து ஈரானை தாக்க வருகின்றார்கள்.

இஸ்ரேலிடம் அயன்டோம், டேவிட் ஸ்லிங் இன்னும் ஏரோ என ஏகப்பட்ட வான்பாதுகாப்பு சாதனம் இருக்க, இந்த தாட் சிஸ்டமும் அவசியமா என்பது தான் உங்களின் கேள்வி. இது வல்லரசுகள் நடத்தும் ஆயுத விளையாட்டு. உலகளவில் மிகவும் தந்திரமானது.

இந்த தாட் சிஸ்டம் இல்லாமலே இஸ்ரேல், ஈரானை நொறுக்கி தன்னையும் காத்துக் கொள்ளும். ஆனால் ஈரானிய ஏவுகணைகள் வளிமண்டலம் தாண்டி சென்று விடும். அதன் பின் அசுரவேகத்துடன் வந்து இஸ்ரேலை தாக்கும் என சொல்லி அமெரிக்கா இஸ்ரேல் போரில் கால் பதிக்கின்றது. இது எதை நோக்கி செல்கின்றது என்றால் விஷயம் எளிதான கணக்கு.

இந்த தாட் சிஸ்டம் உக்ரைனுக்கு செல்லவேண்டியது. அப்படி சென்றால் ரஷ்யாவுக்கு அது மிகப்பெரிய மிரட்டலாக முடியும். எனவே ரஷ்ய அதிபர் புடின் தந்திரமாக செய்த இந்த விஷயம், அமெரிக்காவின் பார்வையை வளைகுடா நாடுகளை நோக்கி திருப்பி விட்டு விட்டது. எனவே இனி அந்த மிரட்டல் புட்டீனுக்கு இல்லை

எவ்வளவு தந்திரமாக புட்டீன் பந்தை தள்ளிவிட்டார் என்றால் இப்படித்தான், அவரின் தந்திரத்தில் சிக்கி அழிந்தது ஹமாஸ், ஹெஸ்புல்லா, இனி ஈரான். ஆனால் அமெரிக்கா காட்ட விரும்புவது என்னவென்றால் ரஷ்யாவின் எஸ் 400 சிஸ்டம் நிச்சயம் படுதோல்வி. அது இனி சந்தை வாய்ப்பினை இழந்து விட்டது.

அமெரிக்காவின் தாட் சிஸ்டம் தான் உலகளவில் மிகவும் நம்பகமானது என காட்ட வேண்டும். ஈரானை அடித்தால், இந்த தாட்சிஸ்டத்தின் வெற்றி, உலகமெங்கும் பரவும். அப்போது அமெரிக்க கொடி உயர பறக்கும். அமெரிக்க ஆயுத சந்தைக்கு மதிப்பு கூடும். அதன் ஆயுதங்கள் விற்பனை அதிகரிக்கும். அதன் மூலம் அமெரிக்கா தன் நாட்டு பொருளாத்தை மேம்படுத்தி தன்னை காப்பாற்றிக் கொள்ளும். இதுதான் இந்த திட்டத்தின் நுணுக்கமான உள்நோக்கம். எனவே தான் அமெரிக்க தாட் சிஸ்டம் இஸ்ரேலில் நிறுவப்பட்டுள்ளது.

இப்போது வலிய ஈரானுடன் வம்பிழுத்து, அந்த நாட்டுடன் போர் செய்தே ஆக வேண்டும். ஒரு வேளை போரை தொடங்க ஈரான் யோசித்தால் உடனே போரை தொடங்கும் படியும், இஸ்ரேல் மேல் ஏவுகணைளை வீசும் படியும் ஒரு சூழலை அமெரிக்கா உருவாக்கியே தீரும். ஆக மொத்தத்தில் இனி ஈரான் போர் தொடங்கா விட்டால் தான் அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நாடுகளுக்கு சிக்கல். எப்படி நிலைமை ஆகி விட்டது பார்த்தீர்களா? இது தான் உலக ஆயுத அரசியல். இதில் இப்போது அமெரிக்காவே முந்தி நிற்கிறது.

Tags:    

Similar News