இலங்கை என்ன இந்தியாவின் ஒரு பகுதியா? கொதிக்கும் இலங்கை அமைச்சர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை நிறைவேற இலங்கை அரசிடமே கேட்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.

Update: 2022-01-21 08:51 GMT

இலங்கை அமைச்சர் உதய கம்மனபில 

இலங்கை குடிமக்களான தமிழ் எம்.பி.க்கள் இந்திய பிரதமருக்கு, 13-வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையை இலங்கை அரசிடம் வலியுறுத்துமாறு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர்.இந்த தகவலை அறிந்ததும் அதற்கு இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுப்ப வேண்டிய இடம் இந்திய பிரதமர்  அல்ல. இலங்கையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்திடம் என்று இலங்கை எரிசக்தி அமைச்சர் உதய கம்மனபில தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா, இறையாண்மையுள்ள நாடு. அது இந்தியாவின் பகுதி அல்ல என்று அவர் கடுமையாக கூறியுள்ளார். இந்த கருத்தை அவரது செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார். 'அரசியலமைப்பின் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து தமிழ் கட்சிகள் கவலைபட்டால்,அதை இலங்கை அதிபரிடம்தான் சொல்லவேண்டும். இந்தியப் பிரதமரிடம் அல்ல என்றார்.

அவர்களது இந்த கோரிக்கையை தமிழ் சகோதரர்கள் இலங்கை அரசாங்கத்தின் முன் வைக்க வேண்டும். தமிழ் எம்பிக்கள் எழுதிய கடிதம் தொடர்பாக எழுந்த ஆட்சேபனை 'கொழும்பு கெஜட்' என்ற இணையதளத்தில் வெளிவந்த செய்தியை அமைச்சர் உதயா மறு ட்வீட் செய்துள்ளார். அமைச்சரின் கருத்தையே அந்த இணையதளம் தலைப்பாக வைத்து செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் எம்.பி.க்களுக்கு, இலங்கைதான் உங்கள் நாடு. இந்தியா அல்ல என்று அமைச்சர் உதயா நினைவூட்டுவது போல அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை தமிழ் எம்.பிக்கள் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வெளியாகியுள்ளது. அதில், '2015ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய போது,இலங்கையில் கூட்டாட்சி பற்றி பேசியதை நினைவுகூர்ந்த எம்.பி.க்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் எப்போதும் பெரும்பான்மையாக உள்ளனர். தமிழர்களைப் பொருத்தவரை, கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு நாங்கள் உறுதியாக உள்ளோம். அரசியலமைப்பு சீர்திருத்தங்களை நாங்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

Tags:    

Similar News