இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

Update: 2022-05-12 15:27 GMT

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்க

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்ச சகோதரர்கள் பதவி விலக வலியுறுத்து மக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் பவிலகுவதற்கு முன்னதாக பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது, ராஜபக்ச ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். இதனால் ஏற்பட்ட வன்முறை கலவரமாக மாறி, இலங்கையே போர்க்களமானது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், நாட்டில் நிலவும் வன்முறையை கட்டுப்படுத்தவும் புதிய பிரதமரை தேர்வு செய்து, புதிய அமைச்சரவையை அமைப்பதில் அதிபர் கோத்தபய தீவிரம் காட்டி வந்தார்.  புதிய அரசு அமைக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.

குறுகிய காலத்திற்காவது பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்சவின் கோரிக்கையை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இன்று (மே 12) இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்றார்.

வரும் 16ம் தேதி இலங்கை நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 15 புதிய அமைச்சர்கள் நாளை (மே13) பதவியேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News