உலகை கட்டுப்படுத்தும் நான்கு பேர் யார் தெரியுமா?

இன்றைய தேதியில் உலக அரசியல் இவர்களின் கைகளில் தான் கதக்களி ஆடிக் கொண்டு இருக்கிறது.

Update: 2024-10-24 02:22 GMT

பிரதமர் மோடி.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினோடு நேரடியாக சம்மந்தப்பட்ட விஷயங்களில் மிகப் பிரதானமானது பெட்ரோடாலர்ஸ். சரியாக சொல்வதென்றால் கச்சா எண்ணெய் வர்த்தகம். இதில் அமெரிக்க சார்பு ஓபெக் நாடுகளின் விலைப் பட்டியல் மூலம் ஆதிக்கம் செலுத்தி வந்த போதிலும் அதன் எதிரணியில் ஓபெக் ப்ளஸ் அதன் பங்களிப்பை விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டு முக்கியமான விஷயங்களை முன்னெடுத்து செயல்படுத்த பிரம்ம பிரயத்தனங்களை செய்து வருகின்றனர் மேற்கு உலக நாடுகளின் கூட்டமைப்பினர்.


இது டாலருக்கு நிகரான அல்லது எதிரான யுரோ கரன்சி என்கிற புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது. அது அங்கு தொட்டு இங்குதொட்டு இன்றைய உலகின் உயிர் நாடியான திரவ தங்கத்தில் நிலை கொண்டுள்ளது. யார் இந்த உலகின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்கள் சொல்லும்.... அல்லது அவர்கள் வைப்பது தான் சட்டம் என்றாகிப்போனது.

இதற்கு மாற்றீடு காண சீனா வேறு மாதிரியான சக்தி ஆற்றலை தேட..... ரஷ்யா தனது சக்தி ஆற்றலை வேறு வழிகளில் எல்லாம் விலை பேச அதகளம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக அவர்கள் பைப் லைன் மூலம் ஐரோப்பிய நாடுகளில் வர்த்தகம் செய்யும் வழிமுறைகளை எல்லாம் ஆராய...விக்கித்து போனதென்னவோ அமெரிக்கா தான்.

காரணம் காலங் காலமாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தை டாலரில் விலை பேச பழக்கி வைத்து கொழித்துக் கொண்டிருப்பது அவர்கள் தான். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னான ரஷ்யா, உக்ரைன் பகுதியான கிரிம்யா தொடர்பான அன்றைய அமெரிக்க துணை அதிபர் ஜோபைடன் உரசல் தான் இன்று வேறுவிதமான அரசியலில் நிலைக்கொண்டிருக்க, அது உலக அளவில் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மைய புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது மேற்சொன்ன நால்வரின் கதக்களி. ரூபாய் ரூபிள் வர்த்தகம் இதற்கு மேம்போக்காக அமைந்தாலும்.... நம்மவர்களின் திட்டமிடல் மிக மிக நுட்பமானது மற்றும் ஆழமானது. அதில் நம்மவர்கள், ஆரம்பித்த இடம் தான் டிமான்டிஷேசன்.

இந்திய ரூபாய் தாள்களின் மதிப்பிழப்பு செய்து புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டு வந்தார் நமது பாரதப் பிரதமர். இதனை வங்கிகள் ஊடாக இறுக்கி பிடித்து ஓர் சமன்பாட்டிற்கு கொண்டு வந்து அதனை இன்று டிஜிட்டலைஸ் செய்திருக்கிறார்கள்.

UPI பேமெண்ட் கொண்டு வந்ததும்.., பணப் புழக்கத்துக்கு ஈடாக ரூபாய் தாள்களின் மூலம் தான் வர்த்தகம் என்கிற நிலைப்பாடு ஏற்படவில்லை. சரியாக சொல்வதென்றால் பணப்புழக்கத்தை மின்னணு முறையில் மாற்றம் செய்திருப்பதால் கள்ளச்சந்தையை கட்டுப்படுத்தவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இன்றைய இணையத்தால் உலக நாடுகளும் இதற்கு பழக ஆரம்பிக்க.... இன்றைய தேதியில் இந்தியா இதில் முன்னோடியாக திகழ ஆரம்பித்திருக்கிறது.

இதனால்......

உலக அளவிலான டாலரின் தேவையை அதன் கட்டுப்பாடுகளை ...... அந்த பெரும் மலையை.... அதன் அடியில் இருந்து குடைய ஆரம்பித்து இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க ரஷ்ய கச்சா எண்ணெயை, இந்தியா கொண்டு வந்து அதனை சுத்திகரித்து வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அதன் மூலம் பணம் பண்ணும் வேலையை முன்னெடுத்து இருப்பதாக மேற்கு உலக நாடுகளில் புகைய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அப்படியா செய்கிறது இந்தியா என்றால்.... கிட்டத்தட்ட அப்படி தான். ஆனால் இதனை கொஞ்சம் நுட்பமாக ஆராய்ந்தால்... கச்சா எண்ணெய் ஒன்றும் அப்படியே சுத்தமாக கிடைக்கக்கூடிய பொருள் அல்ல. இதன் கசடுகளை சுத்தம் செய்ய மிகப் பெரிய தொழிற்சாலை.... அதற்கான தொழில்நுட்பம், எல்லாம் தேவை.

இன்றைய தேதியில் 27% கசடுகளுடன் கூடிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தான் உலகில் இருக்க.... நம் இந்திய தேசத்தில் மட்டுமே இயங்கும் சுத்திகரிப்பு ஆலைகள் கிட்டத்தட்ட 43% கசடுகளுடன் கூடிய கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்யும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

எப்படி....??? எதனால் என்பவர்களுக்கு, நாம் மிகவும் பின்னால் இதனுள் கால் பதித்ததால் மேம்பட்ட விதத்தில் ஆலைகளை கட்டமைத்திருக்கிறோம். ஆசிய நாடுகளில் முதன்முறையாக எண்ணெய் வளத்தை கண்டடைந்த தேசமாக இன்றைய ஈரானாக இருக்கிறது. ஆன போதிலும் முழு வளர்ச்சி கண்ட தேசமாக அது இன்னும் மாற்றம் காணவில்லை. காரணம் மேற்கு உலக நாடுகளின் அரசியல் தந்திரங்கள்... மற்றும் ஆரம்ப காலத்தில் அமைத்த எண்ணெய் துரப்பணப்பணி.

உதாரணமாக எண்ணெய் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் ஆலை இயந்திரங்கள் இயங்க வேண்டும். நின்று விட்டால் மீண்டும் இயங்குவிக்க முடியாதுபடிக்கு ஆலையை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். ஈரானியர்களை ஆள முடியாது என மேற்கு உலக நாடுகள் அறிந்த போது அதற்கு எதிராக சவூதி அரேபியாவில் கடையை திறந்தனர். அது தான் அராம்கோ நிறுவனங்கள். வெளிப்பார்வைக்கு அது சவூதியில் இருந்த போதிலும் அதன் நிர்வாக பங்குதாரர்கள் மேற்கு உலக நாடுகளின் வர்த்தகர்கள் தான்.

1975 ஆண்டுகளில் ஈரான் மன்னர் ஆட்சி கீழ் இருந்த சமயத்தில் கிளர்ச்சி நடந்தது. நடத்தியது மேற்கு உலகம் தான். காரணம் மன்னர் எண்ணெய் வர்த்தகத்தில் மக்களுக்கும் பங்கு உண்டு என்றார். இதனை தொடர்ந்து அந்த மன்னரை அங்கு உள்ள மக்களைக் கொண்டே ஓட ஓட விரட்டி அடித்து விட்டு அயதுல்லா அலி கமெனியை கொண்டு வந்தனர். இன்றளவும் அவர்கள் வகையறா தான் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்......

இவர்களை தான் இன்றைய இஸ்ரேலை வேட்டை ஆடி வருகிறது. இதற்கு தான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் உதவி செய்து வருகிறது. ஆச்சா......

ஈரானில் இப்படி என்றால் அதற்கு அடுத்ததாக உள்ள ஈராக்கில் ஒருவர் வந்தார். ஈரானிய மன்னரை விட ஒரு படி மேலே போய் ஈராக்கிய மக்களுக்கே ஈராக்கிய மண்ணின் கச்சா எண்ணெய் மொத்தமும் சொந்தம் என்றார். புரியும்படி சொல்வதென்றால்.... நம்மூர் எம்ஜிஆர் போல் அங்குள்ளவர்களுக்கு சதாம் உசேன்.

பிறகு நடந்தவை உலகம் அறியும்.

இப்படி எல்லாம் செய்வது யார்.....???? வேறு யார் உளவாளிகள். அமெரிக்க CIA கள்.இவர்களின் நிழல் உலக அரசியலால் இந்த உலகை ஆடிப் படைக்கிறார்கள். இன்றைய தேதியில் அவர்கள் கட்டுப்பாட்டில் தான் அமெரிக்க ராஜாங்கமே ஆடிக் கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.

முள்ளை முள்ளால் எடுப்பது போல ஆகாத்தியம் செய்துக் கொண்டு இருக்கும் அமெரிக்க புலனாய்வு பூனைகளை ரஷ்ய KGB உளவாளி கண்களில் விரல் விட்டு ஆட்டி அதகளம் பண்ணிக் கொண்டு இருக்கிறார். அவர் தாம் விளாடிமிர் புடின். அமெரிக்கர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.

கடந்த காலத்தில் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இவரின் பங்களிப்பு அதிகம் என அமெரிக்கர்களே புலம்பும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார். இப்போது நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் கமலாவை ஆதரித்து நமட்டு சிரிப்புடன் நகர்ந்து விட..... சிரிப்பாய் சந்தி சிரிக்கிறது அமெரிக்கா அதிபர் தேர்தல்.

அதாகப்பட்டது அமெரிக்க அதிபர் தேர்தலில் புடின், கமலாஹாரிசை ஆதரிப்பதாக பகடி செய்து இருக்கிறார். ஒரு வேளை இவர் சொன்னதற்காகவே அமெரிக்கர்கள் டிரம்ப்க்கு வாக்களித்தால் அது இவரின் நண்பருக்கு சாதகமாக அமைந்து விடும். இல்லை கமலா ஜெயித்து வந்தாலும்.... நான் ஆதரவு தெரிவித்தவரை நீங்கள் ஜெயிக்க வைத்திருக்கிறீர்கள் என சொல்லும்படி சிண்டு முடிந்து வைத்து விட்டு ஹாய்யாக வலம் வருகிறார் விளாடிமிர் புடின்.

சரி நம்மவர்கள் இதில் எங்கு வருகிறார்கள்.....???

நம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஜெய்சங்கர் பொட்டில் அடித்தார் போல் தனது சுற்றுப் பயண நிகழ்வில் பேசி வருகிறார். ஆம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்து கொண்டு இருக்கிறோம். வரும் நாட்களிலும் அது தொடரும். அதில் மேற்கு உலக நாடுகள் கவலை கொள்ள என்ன இருக்கிறது எங்கள் நாட்டின் தேவைக்கு நாங்கள் வாங்குகிறோம்., வாங்குவோம் என்கிறார் இவர்.

பொருளாதார தடை அமலில் இருக்கும் போது இப்படி செய்வது என பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க... நாங்கள் ஒன்றும் டாலரில் வர்த்தகம் செய்யவில்லையே..... பண்ட மாற்று முறையில் வாணிபம் தானே செய்கிறோம் என்றிருக்கிறார். இதில் ஏகப்பட்ட உள்ளார்ந்த விஷயங்கள் இருக்கின்றன.

இவர் இப்படி என்றால்.... அஜித் தோவல் ஒரு படி முன்னேறி நேரிடையாக புடினை சந்தித்து நம் பாரதப் பிரதமருக்கு நிகராக... அவர் சார்பில் உக்ரைன் ரஷ்யா மோதலை முடிவுக்கு கொண்டு வர பேசுவதோடு நம் இந்திய சீன எல்லை குறித்தும் பேசியிருக்கிறார். இதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.

அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு கல்வான் மோதலுக்கு முன்பு நிலவிய போக்கை, எல்லையில் கைக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றன. இது ஒன்று.

இரண்டாவது இலங்கையில் அனுரகுமாரா ஜெயித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் இந்திய சார்ப்பு நிலைப்பாட்டை எடுத்து இயங்க ஆரம்பித்து இருக்கிறார். இத்தனைக்கும் இவர் பழுத்த சீன விசுவாசி என்பதை நன்றாக கவனித்தில் கொள்ளவும்.

மூன்றாவதாக மாலத்தீவு மௌசி  பற்றி சொல்லவே வேண்டாம்...‌ இந்தியர்களை வெளியேற்றிவிட்டு தான் மறுவேலை என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தவர்.... இன்று புதுடெல்லியே கதியாக  கிடக்கிறார். இந்திய நல்லுறவே உன்னதம் என்கிறார். UPI பேமெண்டை மாலத்தீவில் நடைமுறை படுத்தியிருக்கிறார்.

நான்காவது.. கொழுந்து விட்டு எரிந்த மியான்மார் முதல் மணிப்பூர் வரையிலான விவகாரங்கள் இன்று காற்றில் கரைந்த பெருங்காயம் போலும் காணாமல் போய் விட்டதை நம்மில் பலர் கவனிக்க மறந்து விட்டனர்.

எப்படி இவையெல்லாம் சாத்தியம்...???

எரிவதை எடுத்து விட்டால் கொதிப்பது தானே அடங்கும் என நம் ஊரில் சொல்வார்களே அது போலவே தான் இதுவும்.

ஒன்றும் புரியவில்லையா...???

ஆக மேற்சொன்ன எல்லா விஷயங்களிலும் அமெரிக்க புலனாய்வு பூனைகளின் பங்களிப்பு இருந்து வந்திருக்கின்றன. இது காலிஸ்தான் இயக்க பயங்கரவாதி பன்னுன் சமாச்சாரம் மூலமாக வெட்ட வெளிச்சமாக..... நம் இந்திய தேர்தல் சமயத்தில் அவர்கள் சிலரை வைத்து பரமபதம் ஆடியது எல்லாம் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கின்றன.

இனி அவர்களின் திட்டத்தை யார் வந்தாலும் காப்பாற்ற முடியாது போகலாம். அவ்வளவு செய்து வைத்திருக்கிறார்கள் இப்போதைய மோடியின் ஆட்கள்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, மற்றும் பிரிக்ஸ் ப்ளஸ் என திரும்பிய பக்கம் எல்லாம் ஆணி அடித்து, அடித்தாடிக் கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்.வரும் காலங்களில் பெட்ரோ டாலரை தூக்கி பரணில் போட அமெரிக்கா சரிய ஆரம்பிக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.

சீனாவை எதிர்கொள்ள இந்தியர்களை தயார் செய்வதாக நினைத்திருந்தவர்களுக்கு., செவ்விந்தியர்களை அழித்தொழித்த அமெரிக்கர்களை இந்தியர்கள் அடக்கி ஆள கிளம்பி வந்திருக்கிறார்கள் என்பது புரியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

Tags:    

Similar News