நாஸ்கோ பாலைவனத்தில் ஏலியன்கள் உடல்கள்..!
பெரு நாட்டின் நாஸ்கோ பாலைவனத்தில் ஏலியன்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மெக்சிகோ நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் முன்பு ஏலியன்களின் உடல்களை காட்சிப்படுத்திய யுஎப்ஓ ஆய்வாளரும், பிரபல எழுத்தாளருமான ஜெய்மி மவுசான்.
நாஸ்கோ பாலைவனத்தில் ஏலியன்கள் பற்றிய அபூர்வ தகவல்களை பார்க்கலாம்.
பூமியைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறு இடங்களில் வாழக்கூடிய உயிர்கள் தான் ‘ஏலியன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. பறக்கும் தட்டுகள், அடையாளம் அறிய முடியாத மர்மமான வான்பொருட்கள், ஏலியன்கள் நடமாட்டம்.. இப்படி அடிக்கடி வெளியாகும் செய்திகள் ஏலியன்கள் குறித்த நம் ஆவலைத் தூண்டிவிடுகின்றன.
ஆனால் அறிவியல் ரீதியாக இதுவரை ஆதாரம் எதுவும் கிடைக்காத நிலையில் கடந்த வாரத்தில் 'இதோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஏலியன்களின் உடல்கள்' என்று இரண்டு ஏலியன்கள் உடல்களை மெக்சிகோ நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் முன்பு காட்சிப்படுத்தி இருக்கின்றார் அந்நாட்டின் பிரபலமான யுஎப்ஓ ஆய்வாளரும், பிரபல எழுத்தாளருமான ஜெய்மி மவுசான்.
பெரிய தலை, சிறிய உடல், மூன்று விரல்கள் கொண்ட கைகள் என பழைய ஹாலிவுட் படங்களில் காட்டப்படுவதை போலவே இருக்கும் இரண்டு ஏலியன் உடல்களை காட்சிப்படுத்திய ஜெய்மி மவுசான், 'இந்த பதப்படுத்தப்பட்ட இரண்டு உடல்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை மனிதர்களின் உடலுடன் அல்லது பூமியில் வாழும் வேறு எந்த உயிரினத்துடன் இவை தொடர்புடையவை அல்ல, என்றார்.
இவை 2017 ஆம் ஆண்டில் பெரு நாட்டின் நாஸ்கோ பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்டவை. இந்த உடல்களை கார்பன் டேட்டிங் முறையில் ஆராய்ந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று மெக்சிகோ தன்னாட்சி பல்கலை தெரிவித்துள்ளது. இந்த உடல்களுக்குள் முட்டைகள் இருப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். அதனால், ஏலியன்கள் இருப்பது நிரூபணமாகி விட்டது. இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் அல்லாதவர்களும் இருக்கின்றனர்' என்று அறிவித்தனர்.
2015 ஆம் ஆண்டிலேயே ஒரு ஏலியன் உடலை கண்டெடுத்ததாக மவுசான் கூறியிருக்கிறார். ஆனால், அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது மனித குழந்தையின் பதப்படுத்தப்பட்ட உடல் என்பதை கண்டறிந்தனர். மேலும், மவுசான் தெரிவித்திருந்த தகவல்களை மெக்சிகோ பல்கலைக்கழக ஆய்வாளர்களும் மறுத்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாசாவின் யுஎப்ஓ ஆய்வாளர்கள் ஏலியன்கள் உடல் என்று சொல்லப்படுவதை ஆராய, அது தொடர்பான தகவல்களை மெச்சிகோ அரசு வழங்க வேண்டும் என்று கூறியதுடன் இதுவரையில் ஏலியன்கள் பற்றி அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றனர்.
மேலும், இது குறித்து பேசிய நாசா விஞ்ஞானி நெல்சன், பூமிக்கு அயல் கிரகத்து உயிரினங்கள் வந்துள்ளதற்கு வாய்ப்பு குறைவு தான். ஆனால், தனிப்பட்ட முறையில் சொல்வதானால், 'இந்த பிரபஞ்சத்தில் (பூமியை தவிற மற்ற இடங்களில்) ஏலியன்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன்' என்று கூறினார்.