மெட்டாவில் 5 ஆயிரம் பேர் டிஸ்மிஸ்

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவில் பணிபுரிந்த 5000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-05-25 16:45 GMT

பைல் படம்.

கொரோனா பரவலுக்கு பிந்தைய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக டிவிட்டர், மெட்டா, அமேசான் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் என பல முன்னணி சமுக வலைத்தளத்தின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இது அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒட்டு மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் ஆகும். இதனிடையே கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் அனைத்து உயர் அதிகாரிகளிடம் இரண்டாவது கட்டமாக பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் லிஸ்ட் தயாரிக்க கூறியிருந்தார். இந்த முறை சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில், மெட்டா நிறுவனம் இறுதிக்கட்ட பணிநீக்க நடவடிக்கையாக 5,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டு வருகின்றனர். சுமார் 5000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் விளம்பரங்கள் விற்பனை, மார்க்கெட்டிங், தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டணிகள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News