மணல் தட்டுப்பாடுக்கு எதிராக லாரிகள் தொடர் போராட்டம் அறிவிப்பு
வரும் மே 23ம் தேதி தமிழகம் முழுவதும் லாரிகளை இயக்காமல், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் அறிவித்துள்ளார்;
மணல் தட்டுப்பாடுக்கு எதிராக லாரிகள் தொடர் போராட்டம் அறிவிப்பு
நாமக்கல்: கட்டுமான பொருட்களின் விலை கட்டுப்பாடின்றி உயர்வதைக் கண்டித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கட்டட பொறியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் வெங்கடாஜலம் தலைமை வகிக்க, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் செல்ல ராசாமணி கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “மணல் குவாரிகளை அரசு நேரடியாக திறக்க வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,” என கோஷமிட்டனர்.
தொடர்ந்து, செல்ல ராசாமணி கூறியதாவது: “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு மணல் குவாரிகளை செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதால், 55,000க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் வேலை இழந்துள்ளன. இதனால் லட்சக்கணக்கான டிரைவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடி வருகின்றனர். கட்டுமானத் துறையில் தொழிலாளர்கள், கல் குவாரி மற்றும் கிரஷர் தொழிலில் நேரடி, மறைமுக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லி கற்கள் உள்ளிட்டவற்றின் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ.2,000 வரை உயர்ந்திருப்பது, கட்டுமானத்துறையை முற்றிலும் முடக்கி வைத்துள்ளது.”
அதற்கான தீர்வாக, மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். மேலும் அனைத்து கல் குவாரி மற்றும் கிரஷர் தொழில்களை அரசுடமையாக்கி, தரமான கனிமங்களை இணையதளம் வழியாக குறைந்த விலைக்கு வழங்க வேண்டும், என்றார்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, வரும் மே 23ம் தேதி தமிழகம் முழுவதும் லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைக்கும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும், செல்ல ராசாமணி அறிவித்தார்.