பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய தம்பதி
மோசடி செய்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என முதலீட்டாளர்கள் கலெக்டரிடம், மனு அளித்தனர்;
பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய தம்பதி
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகேயுள்ள கெஜகோம்பையை சேர்ந்த தம்பதியரான சரவணன் மற்றும் ரம்யா ஆகியோர், நாமக்கல்–துறையூர் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிரான்சிட்டி பெனிபிட் பண்ட் இந்தியா என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனம், முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என நம்பிக்கை அளித்து, பொதுமக்களிடம் இருந்து பணம் சேகரித்ததாக கூறப்படுகிறது. இத்தகைய வாக்குறுதிகளை நம்பி, சுமார் 300க்கும் மேற்பட்டோர், ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரையிலான தொகைகளை முதலீடு செய்துள்ளனர். ஆனால், 2021 ஆம் ஆண்டு, தம்பதியர் நிறுவனம் மூடிவிட்டு திடீரென தலைமறைவாகி விட்டனர். இதனால் மோசடியில் சிக்கிய முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பலர் நாமக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, பணத்தை இழந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் நேரில் மனு அளித்து, தங்கள் முதலீட்டு தொகையை மீட்டுத்தரக் கோரிக்கை விடுத்துள்ளனர். சேந்தமங்கலம் அருகே உள்ள பா.அலங்காநத்தத்தை சேர்ந்த முருகேசன் என்பவர், தனது மனுவில், ரூ.7,52,120 முதலீடு செய்ததாகவும், ஆரம்பத்தில் ரூ.18,000 மட்டுமே வட்டி தொகையாக வழங்கப்பட்டதையும், அதன் பிறகு எந்தத் தகவலும் இன்றி தலைமறைவானதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிறுவனத்தால் நடந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக காத்திருக்கின்றனர்.