பாலம் இருந்தும் பயணிக்க வழியில்லை - போக்குவரத்து நெரிசலில் வாகனஓட்டிகள்
கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர பள்ளிப்பாளையம் பொதுமக்கள் வலியுறுத்தல்;
பாலம் இருந்தும் பயணிக்க வழியில்லை - போக்குவரத்து நெரிசலில் வாகனஓட்டிகள்
பள்ளிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்து வாகனங்கள் சீராக செல்லும் வகையில், கடந்த 2021-ல் ஆலாம்பாளையம் முதல் ஒன்பதாம்படி வரை, பள்ளிப்பாளையம் பிரிவு சாலை வழியாக 3 கிலோமீட்டர் தூரத்திற்கு 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த மேம்பாலம் 2024 மார்சுக்குள் கட்டி முடிக்கப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் பணிகள் இடைவேளைகளில் மிகவும் மெதுவாக மேற்கொள்ளப்பட்டதால், கட்டுமானம் பல மாதங்கள் தாமதமானது. இறுதியாக, மூன்று மாதங்களுக்கு முன் மேம்பால கட்டுமானம் முழுமையாக முடிக்கப்பட்டது. இருப்பினும், இன்னும் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால், பள்ளிப்பாளையம் பகுதியில் அதிகமான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன நெரிசல் காரணமாக பொதுமக்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஈரோட்டில் இருந்து சென்னை, சேலம், நாமக்கல், ஆத்தூர், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு போன்ற முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் அனைவரும் பள்ளிப்பாளையம் வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். மேம்பாலம் திறக்கப்படாமல் உள்ளதால், அனைத்து வாகனங்களும் கீழ் சாலை வழியாக செல்வதால் நெரிசல் மட்டுமல்ல, விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதனைத் தவிர்க்கும் வகையில், தற்போதைய நாமக்கல் மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.