தமிழகத்தில் நாளை வீச போகும் வெப்ப அலை தேர்தல் வாக்குப்பதிவை பாதிக்குமா?

தமிழகத்தில் நாளை வீச போகும் வெப்ப அலை தேர்தல் வாக்குப்பதிவை பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2024-04-18 09:51 GMT

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் நாளை டாக்டர்கள், பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை சார்பில் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்போர் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்போடலாம். ஓட்டுப்பதிவையொட்டி இன்றைய தினமே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், விவிபேட் உள்பட அனைத்து பொருட்களும் தனித்தனியே வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளைய தினம் அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில், நாளை தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் நாளை தமிழகத்தில் வெப்பஅலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஓட்டுப்போட வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் அசவுகரியங்களை சந்திக்கலாம். இதன் காரணமாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள், பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். 24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட வேண்டும். மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல், போதிய மருந்துகளை கைவசம் வைத்திருக்க வேண்டும். அதோடு போதிய அளவிலான பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதுமட்டுமின்றி பணியாளர்கள் எந்த நேரத்தில் அழைக்கும்போதும் உடனடியாக பணிக்கு திரும்பும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இத்தகைய சூழலில் தான் நாளை வெப்பஅலை வீசும் என வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இதனால் முடிந்தவரை வாக்காளர்கள் காலையிலேயே சென்று ஓட்டளிப்பது சிறந்ததாகும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News