பெரியார் சிலைகளில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் அகற்றப்படுமா?

தமிழகத்தில் பெரியார் சிலைகளில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் அகற்ற கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Update: 2022-04-16 05:03 GMT

ஈ.வே. ராமசாமி பெரியார் சமூக நீதிப் போராளி. பெரியார் வாழ்ந்த கால கட்டங்களில் சாதி பாகுபாடுகளுக்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் பல போராட்ட களங்களை கண்டவர். அதே நேரத்தில் கடவுள் மறுப்புக் கொள்கையிலும் தீவிரமாக இருந்தவர். சுயநலம் பாராது, மூடநம்பிக்கைகளை எதிர்த்து மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பகுத்தறிவுக் கொள்கையை அனைவரிடமும் எடுத்துச் சென்றவர் பெரியார்.

தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை பெரியார் சிலை இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா இடங்களிலும் அவரது சிலைகள் உள்ளன. இதற்கு காரணம் பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகம் தான் தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் பவனிவரும் தி.மு.க. அ.தி.மு.க. கட்சிகளின் மூலம்.

தமிழகத்தில் பெரியார் சிலைகளுக்கு அடியில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். இப்படி இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாகவும் மத அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதற்காகவும் அந்த வாசகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், முதல்கட்டமாக கோவில்களின் அருகிலுள்ள சிலை வாசகங்களையாவது அப்புறப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவரது சார்பில் அவரது வழக்கறிஞர் யோகேஷ் கன்னா கடந்த வாரம் மனுதாக்கல் செய்தார்.


இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுவதற்கு முன்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் நடந்த அமர்வின்போது வக்கீல் யோகேஷ் கன்னா மீண்டும் ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க உத்தரவிட வேண்டும் என ஒரு மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அதனை அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்தவும், அதனை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

Similar News