மகன் வீட்டில் நடந்தது என்ன? பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி விளக்கம்
மகன் வீட்டில் நடந்தது என்ன? என்பது பற்றி பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண் தாக்குதலுக்கு உள்ளானதாக புகார் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக எம்.எல்.ஏ. கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் (திமுக) மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி இவரது வீட்டில் ஒரு இளம்பெண்ணை வேலைக்கு வைத்துள்ளனர். இப்பெண் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர். இப்படி இருக்கையில் பணிக்கு வந்த இரண்டே நாட்களில் அவர் வேலை செட்டாகவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவரை அனுப்பாமல் தொடர்ந்து வேலை வாங்கியுள்ளனர்.
இது குறித்து அப்பெண் வீடியோவில் கூறுகையில், "என்னை அடித்து துன்புறுத்தினார்கள். செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டார்கள்" என்று கூறி உடலில் ஏற்பட்டுள்ள காயத்தை காண்பித்து உள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இது தொடர்பாக எம்.எல்.ஏ. கருணாநிதி விளக்கமளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் என் மகனுக்கு 7 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகிவிட்டது. அவர் அவரது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். நான் வேறு பகுதியில் வசிக்கிறேன். அவர்கள் எப்போதாவது இங்கு வருவார்கள். நானும் எப்போதாவது அங்கு செல்வேன். அங்கு நடந்தது என்னவென்ற முழு விவரம்கூட எனக்குத் தெரியாது. நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். நான் இதில் ஏதும் தலையிடவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, "8 மாத காலங்கள் எண்ணிப் பார்க்க முடியாத சித்திரவதையை அந்த இளம்பெண் அனுபவித்திருக்கிறார். இந்த கொடூர குற்றவாளி ஆன்டோ மதிவாணன் அவரது துணைவியார் மெர்லின் ஆகிய இருவரையும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, குற்றவாளிகளுடைய தண்டனையை உறுதி செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உளவியல் ரீதியான கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்திட வேண்டும். அவருடைய உயர்கல்விக்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும். எஸ்சிஎஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து நிவாரணங்களையும் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தவிர நீலம் பண்பாட்டு மையம் உள்ளிட்ட அமைப்புகளும், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.