சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற வைகோ வலியுறுத்தல்

Vaiko Demanded Industries Request தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-12-26 12:24 GMT

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. (கோப்பு படம்).

Vaiko Demanded Industries Request

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் சார்பில், மின் நிலைக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நாளை (டிசம்பர் 27 ஆம் தேதி) தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உயர்த்தப்பட்ட 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்பப் பெறவேண்டும், பீக் ஹவர் கட்டணம் ரத்துசெய்தல், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தையும், பல்முனை ஆண்டு கட்டணத்தையும் உடனடியாக ரத்து செய்தல் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மின்கட்டணம் உயர்த்துவதை தவிர்க்க வேண்டும், 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்குப் பதிலாக 3-ஏ1 என்ற அட்டவணைக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் மின்வாரியம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்குப் பதிலாக 3-ஏ1 என்ற பழைய அட்டவணைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஒருயூனிட்டுக்கு ரூ.7.65 ஆக வசூலிக்கப்பட்ட மின்கட்டணம் ரூ.4.60 ஆக குறையும். என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண தமிழ்நாடு அரசு மற்ற கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் என்று டிசம்பர்-10 ஆம் தேதி மதிமுக நிர்வாக குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பத்து லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டும், சுமார் ஒரு கோடித் தொழிலாளர்களின் வாழ்வாதார நிலையைக் கருதியும் தமிழ்நாடு அரசு, தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News