தமிழகம் முழுவதும் 117 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வர்கள் காலை 8.59 மணிக்குப்பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கபடமாட்டார்கள் என தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-17 11:59 GMT

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் குரூப்-2 தேர்வு 117 மையங்களில் நடைபெறுகிறது என  தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏற்கனவே திட்டமிட்டபடி  முதல்நிலை தேர்வு வரும் 21ம் தேதி காலை 9.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இந்த தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தேர்வர்கள் அனைவரும் 8.30 மணிக்கு தேர்வு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும். தேர்வு மையத்திற்குள் 8.59 மணிக்கு பிறகு வரக்கூடிய தேர்வர்கள், தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு 9 மணிக்கு துவங்கி 12.30 மணிக்கு முடிந்தாலும் 12.45 மணி வரை தேர்வறையில் இருக்கும்  அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12,28,125 பேர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த 15ம் தேதி வரை 9 லட்சத்து 10 ஆயிரத்து 322 பேர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னும் இரண்டு மூன்று தினங்களில் 16 லட்சத்து 28 ஆயிரம் பேர் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் ஆண் தேர்வர்கள் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேரும், பெண் தேர்வுகள் 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48 பேர் தேர்வு எழுதுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் 16,531 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 75 பேர் இரண்டு கைகள் இல்லாதவர்கள், கண்பார்வை குறை உள்ளவர்கள். இவர்களுக்கு 1,800 பேர் உதவிபுரிய காத்திருக்கிறார்கள்.

தமிழ் வழியில் படித்ததாக 79 ஆயிரத்து 942 பேரும்,  பொது ஆங்கிலம் என்ற அடிப்படையில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 586 பேரும், பொதுத் தமிழ் பிரிவில் 9 லட்சத்தை 46 ஆயிரத்து 679 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் 117 மையங்களில் தேர்வு நடைபெற இருக்கிறது. அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 843 பேர் எழுதுகிறார்கள். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 5621 பேர் தேர்வு எழுதுகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News