ஒமிக்ரான் வைரசால் பள்ளிகள் மீண்டும் மூடலா?அமைச்சர் மகேஷ் புது தகவல்

கொரோனாவின் புது வடிவான ஒமிக்ரான் வைரஸ் குறித்த அச்சம் நிலவும் சூழலில், பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்பதற்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-11-29 14:45 GMT

கோப்பு படம் 

உலக நாடுகளை மீண்டும் கொரோனா மிரட்டத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் புது வடிவான ஒமிக்ரான் வைரஸ், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. புதுவகை வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க, மத்திய அரசு தீவிர முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளது. தமிழக அரசும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

அவ்வகையில், ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க, 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக, தொலைக்காட்சி செய்தியை மேற்கோள்காட்டி, சமூகவலைதளத்தில் தகவல் பரவியது.


ஆனால், இந்த தகவல் தவறானது என்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒமிக்ரான் தொற்று பரவும் அச்சம் காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவல் முற்றிலும் தவறு என்றார்.

Tags:    

Similar News