வந்தவாசியில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

வந்தவாசியில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

Update: 2022-05-20 07:17 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திருவண்ணாமலை வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக 100 நாள் வேலை வழங்கவில்லை, எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை முறையிட்டும் 100 நாள் வேலை வழங்க வில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து இன்று காலை வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை உள்ள விளாங்காடு கூட்டுச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு 100 நாள் வேலை வழங்காததைக் கண்டித்தும், விரைவில் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில்  காலை ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News