வந்தவாசியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

வந்தவாசியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-31 01:20 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த புலிவாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி எல்லம்மாள்(47). இவர் காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரத்தை அடுத்த கோவூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 2008-ம் ஆண்டு இவருக்கு ஒரு ஏக்கர் 6 சென்ட் நிலத்தை இவரது தந்தை தான செட்டில்மென்டாக கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த நிலத்துக்கான பட்டா இவரது பெயரில் இருந்து வந்தது.

இந்த நிலையில் அதில் 36 சென்ட் மட்டும் இவருக்கு தெரியாமலேயே வேறு ஒருவர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த எல்லம்மாள் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து பட்டாவை மீண்டும் எல்லம்மாள் பெயருக்கு மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று எல்லம்மாளிடம் தென்னாங்கூர் கிராம நிர்வாக அலுவலர் தனபால் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக மீண்டும் நேற்று புலிவாய் கிராமம் சென்று விஏஓ தனபாலை சந்தித்து, விசாரித்துள்ளார. அதற்கு விஏஓ, ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாற்றம் செய்து தர முடியும் என கூறினாராம்.

இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் எல்லம்மாள் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இருந்த தனபாலிடம் நேற்று மாலை எல்லம்மாள் கொடுத்தார்.

அதை நேற்று மாலை விஏஓ தனபாலிடம் எல்லம்மாள் கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார் விஏஓ தனபாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News