சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சாலையோரம் நின்ற லாரியின் பின்பக்கம் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-02-25 13:34 GMT

சாலை விபத்தில் உயிரிழந்த மகிபால்சிங், சேட்டாராம்.

வந்தவாசி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கரும்புபார லாரியின் பின்பக்கம் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் நிம்பாவாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் மகிபால்சிங் (வயது 29). இதே மாவட்டத்துக்கு உட்பட்ட தேபாவாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டாராம் (27).  மகிபால்சிங் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அச்சரப்பாக்கம் சாலையில் செல்போன் உதிரிப்பாகங்கள் விற்பனை கடையும், சேட்டாராம் வந்தவாசி சீத்தாராமநாயுடு தெருவில் பல்பொருள் மொத்த விற்பனை கடையும் நடத்தி வந்தனர்.

இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்று வசூலை முடித்துக் கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா தொட்டிக்குள்புடி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் விஜி என்பவர் செய்யாறு சர்க்கரை ஆலைக்கு கரும்புபாரம் ஏற்றி வந்த லாரியில் திடீரென டீசல் தீர்ந்ததால், அவர் வந்தவாசி-தெள்ளார் சாலையில் சத்யாநகர் அருகே சாலையோரம் கரும்புபார லாரியை நிறுத்தி விட்டு, டீசல் வாங்க சென்றிருந்தார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் மகிபால்சிங்கும், சேட்டாராமும் வந்த மோட்டார்சைக்கிள் மேற்கண்ட இடத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கரும்புபார லாரியின் பின்பக்கம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பொன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News