தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி கைது

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ததாக மனைவி உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Update: 2024-10-25 11:30 GMT

வந்தவாசி அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ததாக மனைவி உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். 

திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசியை அடுத்த கொழப்பலூா் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் விசிக பெரணமல்லூா் மேற்கு ஒன்றியச் செயலாளர் சீனுவளவன். இவா், கொழப்பலூா் கூட்டுச் சாலை அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை காலை இறந்து கிடந்தாா். இதுகுறித்து சீனுவளவனின் தந்தை தங்கராஜ் தேசூா் போலீஸில் புகாா் அளித்தாா். இப்புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

சில தினங்களுக்கு முன்பு  சீனுவளவன், நண்பர் கல்யாணபுரம் கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவர் ஏரிக்கரை அருகே உயிரிழந்தார். சுதாகர் மரணத்திற்கும் இவரது நண்பரின் மரணத்துக்கும் தொடா்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுதாகரின் மனைவி உள்ளிட்ட இருவா் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

விசாரணையில், கடந்த 17-ஆம் தேதி ஆளியூா் கிராமப் பகுதியில் சுதாகா் மா்மமான முறையில் இறந்து கிடந்ததும், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது சடலத்தை மனைவி மற்றும் உறவினா்கள் சோ்ந்து மயானத்தில் புதைத்ததும் தெரியவந்தது.  இதையடுத்து, கல்யாணபுரம் மயானத்தில் புதைக்கப்பட்ட சுதாகரின் சடலம் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் முன்னிலையில் கடந்த திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்திலேயே உடல்கூறு ஆய்வு செய்யப்பட்டது. 

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது-:

சீனுவளவனும், சுதாகரும் நண்பா்கள். பெருமாள் என்பவர் கல்யாணபுரம் கூட்டுச் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி நெல் அறுவடை இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம் ஆகியவற்றை வாடகைக்கு விட்டு வந்தாா். அப்போது பெருமாளுக்கும், சுதாகரின் மனைவி ரம்யாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரையும் சுதாகா் கண்டித்து வந்துள்ளாா். இதனால் சுதாகரை கொலை செய்ய ரம்யாவும், பெருமாளும் முடிவு செய்தனா். இதற்கு சீனுவளவனையும் உதவிக்கு அழைத்துள்ளனா். இதையடுத்து ரம்யாவும், பெருமாளும் கூறியபடி, கடந்த 17-ஆம் தேதி ஆளியூா் கிராமப் பகுதியில் சுதாகருக்கு மதுவில் விஷம் கலந்து குடிக்க வைத்த சீனுவளவன், அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டாா். இதில் வாயில் நுரை தள்ளியபடி சுதாகா் இறந்தாா் 

சுதாகர் இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் அவரது மனைவி ரம்யாவுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்த போது சுதாகர் இறந்து கிடந்ததை கண்டார். அதிகளவு மதுக்குடித்து இறந்திருக்கலாம் எனக்கருதிய உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்துவிட்டார்கள். இதனிடையே போலீசுக்கு தெரியவந்தால் நமக்கு என்ன ஆகுமோ என்று பயந்து சீனுவளவன் பெரணமல்லூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கினார், 

இதனையடுத்து ரம்யா, பெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். அவா்களிடமிருந்து ஒரு பைக், 4 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன என போலீஸாா் தெரிவித்தனா்.

கள்ளக்காதலால் கணவன் மற்றும் அவரது நண்பனும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News