திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை; வேரோடு சாய்ந்த ஆல மரங்கள்

வந்தவாசி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் பழமையான 3 ஆலமரங்கள் வேரோடு சாய்ந்தன.

Update: 2023-05-31 01:43 GMT

வேரோடு சாய்ந்த ஆல மரங்கள்

திருவண்ணாமலை மற்றும் கலசப்பாக்கம் வந்தவாசி அதை சுற்றி உள்ள கிராமங்களில் திடீரென பெய்த கன மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6:30 மணிக்கு திடீரென சூறைக்காற்றுடன் லேசான தூறல் மழை பெய்ய தொடங்கியது. மாலை 7 மணி முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது . இதனால் திருவண்ணாமலை , வேங்கி கால் , கலசப்பாக்கம் , வந்தவாசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

வந்தவாசியை அடுத்த சாத்தனூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான 3 ஆல மரங்கள் உள்ளன. இந்த ஆலமரத்தின் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதால் 3 ஆல மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை கட்டிடம் மற்றும் ஒரு மின் கம்பம் சேதமானது.

மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குழாய் உடைந்ததால் கிராமத்திற்கு குடிநீர் செல்வது தடைபட்டது.

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு 

சேத்துப்பட்டு, தேவிகாபுரம், நெடுங்குணம், தச்சாம்பாடி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய பலத்த பெய்தது. தச்சாம்பாடி அருகே உள்ள செய்யானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி வளர்மதி . இவருக்கு மோனிஷா, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களும், கோதண்டம், மணிகண்டன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இ்ந்த நிலையில் வளர்மதி நிலத்தில் பயிர் நடவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. திடீரென மின்னல் தாக்கி வளர்மதி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தச்சம்பாடி கிராம நிர்வாக அதிகாரி ரவி கொடுத்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News