ஏரியில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

Strict Action -வந்தவாசியில் ஏரியில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-10-08 09:48 GMT

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கற்றல் திறன் குறித்து குழந்தைகளுடன் உரையாடிய மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்

Strict Action -திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட வந்தவாசி வந்திருந்தார். அப்போது அவர் வந்தவாசி, கீழ்சாத்தமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் கீழ் சாந்தமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் குடிநீர் குளம் அமைத்தல் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து வந்தவாசி நகராட்சியில் ரூபாய் 1.50  கோடியில் நடைபெற்று வரும் மின் மயானம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த அவர் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசியிடம் தெரிவித்தார்.

அப்போது கலெக்டர் முருகேஷிடம் வந்தவாசி நகராட்சி தலைவர் ஜலால்,  நகர ஆரம்ப சுகாதாரம் நிலையம் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டும் பணி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்து  நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் கட்டிடம் கட்டும் பணியை ஆரம்பித்த நிலையில் அப்போது குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் தங்களுக்கு சொந்தமான இடம் என கூறியதன் பேரில் வேறு இடம் இல்லாத காரணத்தால் அதே பகுதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இந்த இடத்தினை நகராட்சிக்கு மாற்றித் தருமாறு கோரிக்கை மனு அளித்தார்.

இதனையடுத்து அங்கு நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர் முருகேஷ், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஏரிக்கரையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுவதால், இங்கு கழிவுகளை கொட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதற்கு நகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணிகளை நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருவதாகவும் இருந்தபோதிலும் அதிகாலை வேளையில் இறைச்சி கடைக்காரர்கள் இங்கே கொட்டுகின்றனர் . இதனால் தினந்தோறும் குப்பைகளை அகற்றினாலும் துர்நாற்றம் வீசுகின்றது சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது என விளக்கம் அளித்தனர்.

அதற்கு கலெக்டர், இதே போன்று சம்பவம் அனைத்து நகரங்களிலும் நடக்கின்றது. எனவே இதனை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.  அதேபோல் கடைக்காரர்கள் எச்சரிக்கையை மீறி கொட்டினால் அவரது கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

பின்பு வெங்காராம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூபாய் 23 லட்சம் மதிப்பில் புதியதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியை ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

அங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கற்றல் திறன் மற்றும் கட்டிடத்தின் தரம் குறித்தும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 9 லட்சம் மதிப்பில் பண்ணை குட்டை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது,  இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் ஆய்வு செய்தார்..

நிறைவாக வந்தவாசியில் தனியார் திருமண மண்டபத்தில் செய்யாறு கோட்டத்துக்குட்பட்ட செய்யாறு,  அனக்காவூர்,  வெம்பாக்கம்,  வந்தவாசி தெள்ளாறு,  பெரனமல்லூர்,  சேத்துப்பட்டு,  ஆரணி   மற்றும் மேற்கு ஆரணி ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News