ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஊராட்சிகளுக்கு சேரவேண்டிய நிதியை உடனே வழங்கக்கோரி வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2021-12-29 06:50 GMT

வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தில் 61 கிராம ஊராட்சிகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பதவி ஏற்று பணிபுரிந்து வருகின்றனர். தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.7 கோடி நிதி வந்துள்ளது. ஆனால் இதுவரை ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்கப்படவில்லை.

அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுப்படி கிராமத்தில் செய்து முடிக்கப்பட்ட அடிப்படை வசதிக்கான நிதியை உடனே ஊராட்சி மன்றத்திற்கு வழங்க வேண்டும். ஆடு, மாடு கொட்டகை கட்டும்போது ஊராட்சி மன்ற தலைவர்களை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களை அழைத்து அடிக்கடி கூட்டம் நடத்த வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு குழு சார்பில் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமியிடம் மனு கொடுத்தனர்.

அதில் உடனே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பணி ஆணை பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும். இல்லையென்றால் அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம் என கூறி அங்கு தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டுகாவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரையும் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து 100 நாள் பணிக்கான ஆணை வழங்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

Similar News