டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வர்களுக்கு தன்முனைப்பு கருத்தரங்கம்

வந்தவாசியில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வர்களுக்கு தன்முனைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-06-08 02:03 GMT

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வர்களுக்கு நடைபெற்ற  தன்முனைப்பு கருத்தரங்கம் 

வந்தவாசியில், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்விற்காக கிளை நூலகத்தை பயன்படுத்திய தேர்வர்களுக்கு, வந்தவாசி கிளை நூலகம் மற்றும் பூங்குயில் பதிப்பகம் இணைந்து நடத்திய தன்முனைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் பூங்குயில் பதிப்பகம் இணைந்து நடத்திய டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்விற்காக கிளை நூலகத்தை பயன்படுத்திய தேர்வர்களுக்கு தன்முனைப்பு கருத்தரங்கம் நூலகர் எஸ்.சத்தியநாராயணன் தலைமையில் நடைபெற்றது.

இரும்பேடு அரசுப்பள்ளி தலைமையாசிரியர் வாசு முன்னிலை வகித்தார். பூங்குயில் பதிப்பக நிறுவனர் பூங்குயில் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலரும், தமுஎச மாவட்ட தலைவர் முத்து வேலன் தனது கருத்துரையில், தமிழகத்தின் இளைஞர்களிடம் அரசு பணிகளில் சேர்வதற்கான ஆர்வம் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக உள்ளது. பணியிடங்களை விட போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகம் உள்ளனர். நமக்கு விண்ணப்பம் செய்தவர் போட்டியில்லை. வெற்றி பெறுபவரே போட்டியாளர் என்ற மனநிலை வரவேண்டும். அறிவாற்றல் என்பது வேறு. அறிவுக் கூர்மை என்பது வேறு. கோவிலின் படிக்கட்டு தாங்கிய உளியின் வலியை விட சிலை வாங்கிய வலி அதிகம். எனவே, தம்மைத் தாமே செதுக்கிக் கொள்பவரே சிலையாக முடியும். அகலப்படிப்பதை விட ஆழப்படிப்பது சிறந்தது. மற்றெல்லா இடங்களைவிட தேர்வு அ றை யி ல் தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும். பதட்டப்படாமல் இருப்பதே பாதி வெற்றிக்கு சமம். இந்த கிளை நூலகத்தை பயன்படுத்தும் நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று அரசு அலுவலர்களாக, நேர்மையான அரசு அலுவலர்களாக திகழ வாழ்த்துகள் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய தென்னாங்கூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முனைவர். பிரபாகரன், வெற்றிக்கான நுணுக்கமான குறிப்புகள் தந்து உரையாற்றினார். அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இரகுபாரதி வாழ்த்துரை வழங்கினர்.

கவிஞர் தமிழ்ராசா, செய்தியாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் ராதா கிருஷ்ணன், ஆசிரியை சாந்தி, லாரன்ஸ் மற்றும் தேர்வர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வந்தவாசி கிளை நூலக மூன்றாம் நிலை நூலகர் ஜோதி, நன்றி கூறினார்.

Tags:    

Similar News