செங்கம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்

செங்கம் மில்லத் நகா் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

Update: 2023-03-16 11:14 GMT

செங்கம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மில்லத் நகா் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி  நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் பொருட்டும், சாலையின் இருபுறமும் பக்கவாட்டு கால்வாய் அமைத்து சாலையை விரிவுபடுத்தும் நோக்கிலும், மில்லத் நகா்  முதல் செய்யாறு மேம்பாலம் வரை இருக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள சம்பந்தப்பட்ட வா்களுக்கு நோட்டீஸ் அளித்து, காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பலா் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதுதவிர, அகற்றப்படாமல் இருந்த ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இன்று  போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினா். மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

வந்தவாசி

வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெறும் கோமுட்டி குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அறநிலையத் துறை அலுவலரிடம் உபயதாரா்கள் கோரிக்கை விடுத்தனா்.

வந்தவாசி ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் சிவாஜி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

9-ஆம் நாள் தீா்த்தவாரி உற்சவம் நடைபெறும் கோமுட்டி குளக்கரையில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று செயல் அலுவலா் சிவாஜியிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உபயதாரா்களிடம் உறுதியளித்தாா்.

சாலைப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், மட்டபிறையூா் -ராந்தம் இடையிலான 5 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.6 கோடியில் தாா்ச் சாலையும், போளூா்-மன்சுராபாத் செல்லும் சாலையில் பெலாசூா் கிராம ஏரிக்கரை மீது 2020-2021ஆம் நிதியாண்டில் ரூ. 2 கோடியில் 2 கி.மீ. தொலைவுக்கு தடுப்புச் சுவா் அமைத்தல் பணியும் நடைபெற்றுள்ளது.

இந்தப் பணிகளை கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல் அளவீடு செய்யும் கருவி மூலம் ஆய்வு செய்தாா் . கோட்டப் பொறியாளா் முரளி, உதவிப் பொறியாளா் கோவிந்தசாமி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Tags:    

Similar News