வந்தவாசியில் 'வராத' கரண்ட்! மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

வந்தவாசியில் மின்வெட்டை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-23 01:30 GMT

மின்வெட்டை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலையில் படுத்து, மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசி மற்றும் வெண்குன்றம், கடம்பை, சென்னாவரம், மருதாடு, ஆராசூர், பொன்னூர், அம்மையப்பட்டு, மடம், மழையூர், வங்காரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 130-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் வந்தவாசி அரசு மருத்துவமனையிலும் மின் வெட்டு இருந்து வருகிறது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வந்தவாசி பகுதியில் 2 நாட்களாக மாலை நேரத்தில் 2 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமப்பட்டனர்.

இந்தநிலையில் வந்தவாசி பழைய பஸ் நிலையத்தில்,  தொடர் மின்வெட்டை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் நேற்று இரவு திடீரென சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.   இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும் சாலை மறியலை கைவிட்டு  அவர்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். 

Tags:    

Similar News